ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ரூ.10 லட்சம் இழப்பு: மனமுடைந்த பட்டதாரி இளைஞர் தற்கொலை

By ந.சரவணன்

ஆன்லைனில் ரம்மி விளையாடி ரூ.10 லட்சம் வரை பணத்தை இழந்து கடனாளியாக மாறிய பட்டதாரி இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வாணியம்பாடியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வட்டம், புருஷோத்தமகுப்பம் அடுத்த காட்டுக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சிவலிங்கம் (62). இவரது மகன் ஆனந்தன்(30). சென்னையில் ஐடி நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், ஆன்லைன் மூலம் நடத்தப்படும் ரம்மி விளையாட்டில் பங்கேற்ற ஆனந்தன் ரம்மி விளையாட தொடங்கினார். ஆரம்பத்தில் ரம்மி விளையாட்டில் கொஞ்சம் பணத்தை சம்பாதித்த ஆனந்தன் தொடர்ந்து பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு ரம்மி விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டி பகல், இரவு பாராமல் ரம்மி விளையாட்டில் மூழ்கினார்.

வேலை நேரம் போக செல்போனில் எந்த நேரமும் ரம்மி விளையாட்டில் பணத்தைக் கட்டி விளையாடத்தொடங்கினார். இதனால், சம்பாதிக்கும் பணத்தை ரம்மி விளையாட்டில் அவர் இழந்தார். வீட்டுச்செலவுக்கு கூட பணம் அனுப்ப முடியாத நிலைக்கு ஆளானார். இது குறித்து பெற்றோர் கேட்டபோதெல்லாம் கரோனா காரணமாக வேலை செய்யும் நிறுவனத்தில் சம்பளம் தரவில்லை. விரைவில் கொடுப்பார்கள் எனக்கூறி சமாளித்து வந்தாக தெரிகிறது.

ஆன்லைன் விளையாட்டில் ஏறத்தாழ 10 லட்சம் வரை பணத்தை இழந்த ஆனந்தன், நண்பர்கள், தெரிந்தவர்கள் என பலரிடம் ரூ.6 லட்சம் வரை கடன் வாங்கி அந்த பணத்தை கொண்டு ஆன்லைன் மூலம் ரம்மி விளையாடி வந்தார்.

கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு நச்சரிக்கத்தொடங்கினர். இந்த கடனை திருப்பி கொடுக்க மேலும், மேலும் கடன் வாங்கி ரூ.10 லட்சம் வரை ரம்மி விளையாட்டில் இழந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே, ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க சொந்த ஊருக்கு ஆனந்தன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வந்தார்.

நேற்று நடைபெற்ற 2-ம் கட்ட வாக்குப்பதிவில் கலந்து கொண்டு ஆனந்தன் வாக்களித்தார். பிறகு சென்னை திரும்புவதற்கான ஏற்பாடுகளை செய்தார். அப்போது, தன் குடும்பத்தாரிடம் தனக்கு நிறைய கடன் ஏற்பட்டுள்ளதால், கொஞ்சம் பணம் தேவை எனக்கேட்டபோது குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. பெற்றோர், குடும்பத்தினர் விசாரித்தபோது ஆனந்தன் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் லட்சணக்கணக்கான பணத்தை இழந்து கடனாளியாக மாறியிருப்பது தெரியவந்தது.

இதனால், ஆத்திரமடைந்த ஆனந்தனின் பெற்றோர் மற்றும் குடும்பத்தார் அவரை கண்டித்தனர். இதனால், மனமுடைந்த ஆனந்தன் நேற்றிரவு தனது அறைக்கு உறங்கச்சென்றவர் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று காலை ஆனந்தனை எழுப்பச்சென்ற பெற்றோர் இதை கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டனர்.

இது குறித்து வந்த புகாரின் பேரில் வாணியம்பாடி கிராமிய காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து ஆனந்தன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் கடனாளியாக மாறிய ஆனந்தன் தற்கொலை செய்து கொண்ட இந்த சம்பவம் வாணியம்பாடியில் நேற்று சோகத்தை ஏற்படுத்தியது, பல பேரின் உயிரை பறிக்கும் ஆன்லைன் ரம்மி சூதாட்ட விளையாட்டுக்கு தமிழக அரசு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE