கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை 30 மணி நேரத்தில் மீட்பு: பெற்றோரிடம் ஒப்படைத்த போலீஸார்

By வி.சுந்தர்ராஜ்

தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தையைக் காவல் துறையினர் 30 மணி நேரத்தில் மீட்டு, தாயிடம் ஒப்படைத்தனர்.

தஞ்சாவூர் பர்மா காலனியைச் சேர்ந்தவர் குணசேகரன் (24), டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவரது மனைவி ராஜலட்சுமி (20). இவர்களுக்குக் கடந்த ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது.

நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்த ராஜலட்சுமி தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் அக். 4-ம் தேதி சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு அக்.5-ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து தாயும் சேயும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

குழந்தையைக் கடத்திய விஜி

இந்நிலையில் இக்குழந்தையை நேற்று காலை ஒரு பெண் கட்டைப்பையில் வைத்துக் கடத்திச் சென்றார். இதுகுறித்துக் குழந்தையின் தந்தை மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார், உடனடியாக போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ரவளிப்ரியா உத்தரவின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரவீந்திரன் மேற்பார்வையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

மருத்துவமனை வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைக் காவல் துறையினர் ஆய்வு செய்தனர். தொடர் விசாரணையில் குழந்தையைக் கடத்திச் சென்ற பெண்ணைத் தனிப்படையினர் இன்று (9-ம் தேதி) பிற்பகல் பிடித்து, குழந்தையை மீட்டனர்.

குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த விஜி (37) என்பதும், தனது மூன்றாவது கணவருக்கு இக்குழந்தையைக் காட்டி சொத்துகளைப் பெறுவதற்காகக் கடத்தி வந்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் விஜியைக் காவல்துறையினர் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மீட்கப்பட்ட குழந்தையை தஞ்சாவூர் ராசா அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவுக்கு இன்று மாலையில் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் கொண்டு வந்தபோது மக்கள் கைதட்டி வரவேற்றனர். மேலும் காவல் துறையினருக்கும் கைதட்டிப் பாராட்டு தெரிவித்தனர். இதையடுத்து பெற்றோர் குணசேகரன் - ராஜலட்சுமியிடம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் குழந்தையை ஒப்படைத்தார். குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்ட தனிப்படையினரைக் காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE