கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே 8 வயதுச் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 70 வயது முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கரூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகேயுள்ள பாப்பநாயக்கன் பட்டியைச் சேர்ந்தவர் நாட்ராயன் (70). இவர் கடந்த ஆண்டு செப். 30-ம் தேதி அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த 8 வயதுச் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதுகுறித்து அரவக்குறிச்சி போலீஸில் சிறுமியின் தாய் புகார் அளித்தார்.
அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ வழக்குப் பதிவு செய்து நாட்ராயனைக் கைது செய்தனர். கரூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் நீதிபதி இன்று (அக்.8-ம் தேதி) தீர்ப்பு அளித்தார்.
அதில், நாட்ராயனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் அதனைக் கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.