மக்களை நகைக்‌ கடன்‌ வாங்கத்‌ தூண்டியது யார்‌? அனைத்து கூட்டுறவு சங்கங்களின்‌ மீதும்‌ பழி சுமத்துவது ஏன்?- செல்லூர் ராஜூ சரமாரிக் கேள்வி

By செய்திப்பிரிவு

பொதுமக்கள்‌ 5 பவுன்‌ வரை தங்களது நகைகளை வங்கிகளில்‌ அடகு வைத்துக்‌ கடன்‌ வாங்கத்‌ தூண்டியது யார்‌?, அனைத்து கூட்டுறவு சங்கங்களின்‌ மீதும்‌ பொதுவாகப் பழி சுமத்துவது ஏன் என்று கூட்டுறவுத் துறை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

''தங்கள்‌ உழைப்பை வியர்வையாய்‌ சிந்தி, இந்நாட்டு மக்களுக்கு உணவு அளிக்கக்‌கூடிய வேளாண்‌ பெருமக்கள்‌, புயல்‌, மழை, வெள்ளம்‌ மற்றும்‌ வறட்சி போன்ற இயற்கைச்‌ சீற்றங்களால்‌ பாதிப்படையும்‌போது, தாங்கள்‌ பயிரிட்ட வேளாண்‌ பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்காமல்‌, விலைக் குறைவால்‌ நஷ்டத்திற்கு உள்ளாகும்‌ சமயங்களில்‌, அரசு, விவசாயிகளின்‌ சிரமத்தில்‌ பங்குகொள்ளும்‌ வகையில்‌, அவர்கள்‌ கூட்டுறவு சங்கங்கள்‌ மூலம்‌ வாங்கிய கடன்களுக்கு வட்டி தள்ளுபடி, கடன்‌ தள்ளுபடி என்று நிலைமைக்குத்‌ தக்கவாறு முடிவெடுத்து, விவசாயிகளின்‌ துயரத்தில்‌ பங்கு கொள்கிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா நோய்த்‌தொற்றின்‌ காரணமாக விவசாயிகள்‌, தங்கள்‌ விளைபொருட்களுக்கு ஏற்ப விலை இல்லாத நிலையில்‌, அவர்களுக்குக்‌ கிடைக்க வேண்டிய நியாயமான விலை கிடைக்கவில்லை. இதனால்‌ பெருத்த நஷ்டத்திற்கு உள்ளாகினர்‌. எனவே, தொடர்ந்து விவசாயிகள்‌ வேளாண்‌ கடன்‌ மற்றும்‌ நகைக்‌ கடன்‌ வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகி உள்ளனர்‌. எனவேதான்‌, அதிமுக‌ அரசு 'விவசாயக்‌ கடன்‌ தள்ளுபடி செய்யப்படும்‌” என்று அறிவித்து அதற்கான அரசாணையையும்‌ வெளியிட்டது.

பொதுவாக, ஒரு விவசாயி குடியிருக்கும்‌ இடம்‌ ஒன்றாக இருக்கும்‌. அவருடைய நிலங்கள்‌ அந்த கிராமத்திலோ அல்லது பக்கத்தில்‌ உள்ள கிராமங்களிலோ இருக்கும்‌. அப்படிப்பட்ட சமயங்களில்‌, அந்த விவசாயினுடைய நிலங்கள்‌ எந்தெந்த கிராமங்களில்‌ உள்ளதோ, அந்தந்த கிராமங்களில்‌ உள்ள கூட்டுறவு சங்கங்கள்‌ மூலம்‌தான்‌ வேளாண்‌ பயிர்க்‌ கடன்‌ வாங்குவார்கள்‌. அதுதான்‌ கூட்டுறவு சங்கங்களின்‌ விதியும்‌ கூட. இம்முறையில்‌தான்‌ வேளாண்‌ கடனும்‌ ஆண்டாண்டு காலமாகத் தமிழ்‌நாடு முழுவதும்‌ வழங்கப்பட்டு வருகிறது.

மேலும்‌, வேளாண்‌ பயிர்க்‌ கடன்‌ தள்ளுபடி செய்யப்படும்‌ என்ற அறிவிப்பு, தேர்தல்‌ தேதி அறிவிப்புக்கு முன்னதாகத்‌தான்‌ வெளியிடப்பட்டது. எனவே, தேர்தல்‌ தேதி அறிவிப்பிற்கு முன்‌ வேளாண்‌ கடன்கள்‌ பெற்ற அனைத்து விவசாயிகளும்‌, முறைகேடாகக்‌ கடன்‌ பெற்றவர்களா என்பதை நாம்‌ சிந்தித்துப்‌ பார்க்க வேண்டும்‌.

அதேபோல்‌, தேர்தல்‌ சமயத்தில்‌ திமுகவின்‌ தலைவரும்‌, அவரது வாரிசும்‌ பிரச்சாரப்‌ பொதுக்கூட்டங்களில்‌, திமுக ஆட்சிக்கு வந்தவுடன்‌ கூட்டுறவு வங்கிகள்‌, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள்‌ மற்றும்‌ தனியார்‌ வங்கிகளில்‌ 5 பவுன்‌ வரை தமிழக மக்கள்‌ வாங்கிய நகைக்‌ கடன்‌ தள்ளுபடி செய்யப்படும்‌ என்றும்‌; நீங்கள்‌ உடனே வங்கிகளில்‌ 5 பவுன்‌ வரை அடகு வைத்து நகைக்‌ கடன்‌ பெற்றுக்கொள்ளுங்கள்‌; நாங்கள்‌தான்‌ ஆட்சிக்கு வருவோம்‌, வந்தவுடன்‌ உங்களது நகைக்‌ கடன்‌ தள்ளுபடி செய்யப்படும்‌ என்றும் பொதுமக்களைத்‌ தூண்டிவிடும்‌ வகையில்‌ பேசியதை அனைத்து ஊடகங்களும்‌, தினசரி நாளிதழ்களும்‌ செய்திகளாக வெளியிட்டிருந்தன.

திமுக தேர்தல்‌ அறிவிப்பு வாக்குறுதிகள்‌ வெளியிட்டபோதும்‌, தேர்தல்‌ பிரச்சாரக்‌ கூட்டங்களில்‌ பேசும்பொழுதும்‌, குடும்பத்தில்‌ ஒருவருக்கு மட்டுமே நகைக்‌ கடன்‌ தள்ளுபடி செய்யப்படும்‌ என்று, எந்த நிபந்தனையும்‌ விதிக்கவில்லை. இவர்களது பேச்சை நம்பி, 5 பவுன்‌ வரை குடும்பத்தில்‌ உள்ள அனைவரும்‌ நகைகளை வங்கிகளில்‌ வைத்துக் கடன்‌ பெற்றனர்‌. இந்தக்‌ குழப்பத்திற்குக்‌ காரணம்‌ திமுகவின்‌ தேர்தல்‌ அறிவிப்பு வாக்குறுதிதான்‌. தற்போது, மக்கள்‌ நகைக்‌ கடனுக்குத் தேவையின்றி வட்டி கட்டும்‌ நிலைக்குத்‌ தள்ளப்பட்டுள்ளனா்‌.

அனைவருக்கும்‌ நகைக்‌ கடன்‌ தள்ளுபடி செய்யப்படும்‌ என்று அறிவித்துவிட்டு, தற்போது பலவிதமான நிபந்தனைகளை விதிப்பது; நகைக்‌ கடன்‌ வழங்கியதில்‌ முறைகேடுகள்‌ செய்துவிட்டதாகவும்‌, மோசடியில்‌ ஈடுபட்டதாகவும்‌ கூட்டுறவு சங்கங்கள்‌ மீதும்‌, அதன்‌ பணியாளர்கள்‌ மீதும்‌, கடன்‌ பெற்ற பொதுமக்கள்‌ மீதும் குற்றம்‌ சுமத்திப்‌ பேசுவது, அனைவரையும்‌ கொச்சைப்படுத்துவதாக இருக்கிறது.

இப்படி, பொதுமக்கள்‌ 5 பவுன்‌ வரை தங்களது நகைகளை வங்கிகளில்‌ அடகு வைத்துக்‌ கடன்‌ வாங்கத்‌ தூண்டியது யார்‌? நகைக்‌ கடன்‌ மட்டுமல்ல, நிறைய நிறைவேற்ற முடியாத பல வாக்குறுதிகளை அளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்த பிறகு அவற்றை நிறைவேற்ற முடியாத நிலையில்‌, மற்றவர்கள்‌ மேல்‌ பழி போடுவது யார்‌ ?

ஒரு உன்னத நோக்கத்துடன்‌ 'கூட்டுறவே நாட்டுயர்வு என்று நமது முன்னோர்களால்‌ திட்டமிட்டு ஆரம்பிக்கப்பட்ட கூட்டுறவு இயக்கம்‌, இன்று தமிழ்‌நாடு முழுவதும்‌ வெற்றிகரமாக இயங்கிக்‌ கொண்டிருக்கிறது. ஒருசில கூட்டுறவு சங்கங்கள்‌ தவிர, தமிழ்‌நாட்டில்‌ 99 சதவீதக் கூட்டுறவு சங்கங்கள்‌ தங்கள்‌ பகுதியில்‌ உள்ள விவசாய உறுப்பினர்களுக்குத் தேவைப்படும்‌ நேரங்களில்‌ (உழவுப்‌ பணிகளுக்காக), குறைந்த வட்டிக்குக்‌ கடன்‌ அளித்தல்‌, விதை மற்றும்‌ உரங்கள்‌ வழங்கி உதவுதல்‌, நகைக்‌ கடன்‌ அளித்தல்‌, வீட்டுக்‌ கடன்‌ அளித்தல்‌ மற்றும்‌ அந்த கிராமங்களில்‌ நியாய விலைக்‌ கடைகளை நடத்துதல்‌ போன்ற சேவைகளை அந்தந்தப்‌ பகுதி மக்களுக்கு அளித்து வருகிறது.

வேளாண்‌ பயிர்க்‌ கடன்‌ வழங்கியதிலும்‌, நகைக்‌ கடன்‌ வழங்கியதிலும்‌ ஏதேனும்‌ தவறுகள்‌ நடந்திருந்தால்‌, அத்தவறுக்குக்‌ காரணமானவர்களைக்‌ கண்டறிந்து அவர்கள்‌ மீது கடும்‌ நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, அனைத்து சங்கங்களின்‌ மீதும்‌ பொதுவாகப் பழி சுமத்தக் கூடாது.

இப்படி, பொதுவாகக் கூட்டுறவு சங்கங்கள்‌ மீது அவப்‌பெயரை ஏற்படுத்தினால்‌, அதன்‌ உறுப்பினர்கள்‌ கூட்டுறவு இயக்கத்தின்‌ மீது நம்பிக்கை இழந்து, தங்களது வைப்புத்‌ தொகையைத் திருப்பிக்‌ கேட்பார்கள்‌. முதலீடு இல்லாமல்‌ சங்கம்‌ எப்படி இயங்கும்‌? எனவே, எந்தச் சங்கத்தில்‌ முறைகேடு நடந்திருக்கிறதோ, அந்தக் குறிப்பிட்ட சங்கத்தில்‌ உள்ளவர்கள்‌ மீது தமிழ்‌நாடு கூட்டுறவு சங்கச்‌ சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனவே, செய்தி ஊடகங்கள்‌, கூட்டுறவு சங்கங்களில்‌ ஊழல்‌/ முறைகேடு என்று பொத்தாம்‌ பொதுவாகச் செய்தியை வெளியிடாமல்‌, செய்தியின்‌ உண்மைத்‌ தன்மையை ஆராய்ந்து வெளியிட வேண்டும்‌ என்று ஜனநாயகத்தின்‌ 4ஆம்‌ தூண்களான செய்தி மற்றும்‌ ஊடகத்‌ துறையினரைக் கேட்டுக்கொள்கிறேன்‌.

கிராமங்களின்‌ மூலாதாரமான வேளாண்மை, சிறந்த முறையில்‌ இயங்குவதற்கு அடித்தளமாக விளங்கும்‌ கூட்டுறவு சங்கங்கள்‌, தொடர்ந்து நல்ல முறையில்‌ செயல்படத்‌ தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்‌ என்று திமுக அரசைக்‌ கேட்டுக்கொள்கிறேன்‌''.

இவ்வாறு செல்லூர் கே.ராஜூ தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

49 mins ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்