9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு: கோயில் பூசாரிகள் நலச் சங்கம் முடிவு

By ஜெ.ஞானசேகர்

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து வாக்களிப்பது என்று கோயில் பூசாரிகள் நலச் சங்கம் முடிவு செய்துள்ளது.

கோயில் பூசாரிகள் நலச் சங்கத்தின் திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் வளநாடு கைக்காட்டி அருகே தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் இன்று நடைபெற்றது.

கூட்டத்துக்குத் தலைமை வகித்த சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.வாசு, செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது:

''கோயில் பூசாரிகளுக்காக பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்துள்ள தமிழ்நாடு முதல்வருக்கு மாவட்டந்தோறும் நன்றி அறிவிப்புக் கூட்டத்தை நடத்தி வருகிறோம். முதல்வரை விரைவில் நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்கவுள்ளோம்.

கிராமக் கோயில் பூசாரிகள் நலவாரியத்தை மு.கருணாநிதி முதல்வராக இருந்தபோது அமைத்தார். அதில், 69 ஆயிரம் பேர் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டனர். அந்த நலவாரியத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று முந்தைய அதிமுக அரசிடம் 10 ஆண்டுகளாக வலியுறுத்தினோம். ஆனால், திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது என்ற ஒரே காரணத்துக்காகப் புறக்கணித்தனர். இதனால், பூசாரி ஒருவருக்குக் கூட நலவாரியப் பயன்கள் கிடைக்கவில்லை. பூசாரிகளுக்கு மாத ஊதியம் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டும் அதிமுக அரசு மதிக்கவில்லை.

ஆனால், திமுக பூசாரிகளுக்கான நலத்திட்டங்களைத் தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்ததுடன், அவற்றை ஒரே வாரத்தில் செயல்படுத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது. அதேபோல், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டம் வரவேற்புக்குரிய அற்புதமான திட்டம்.

பூசாரிகளுக்குப் பல்வேறு நலத்திட்டங்கள் தொடர்ந்து கிடைக்க, 9 மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றி பெற வேண்டும். இதையொட்டி, திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம். ஏனெனில், திமுக ஆட்சி உள்ளாட்சி அமைப்புகளில் அமைவதன் மூலம் கிராமப்புறக் கோயில்களில் பூஜைகள் மேலும் சிறப்பாக நடைபெறுவதுடன், கோயில்களும் மேம்பாடு அடையும். எனவே, 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்து, வாக்களிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது''.

இவ்வாறு பி.வாசு தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE