காதலித்து திருமணம் செய்த கணவர் ஆணவக் கொலை?- ஆரணி காவல் நிலையத்தில் மனைவி புகார்

By செய்திப்பிரிவு

பெரியபாளையம் அருகே காதலித்து திருமணம் செய்த இளைஞர் ஆணவக் கொலை செய்யப்பட்டுள்ளதாக, அவரது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகேஉள்ள ஆவூர் பகுதியைச் சேர்ந்தவர் அமுல் (29). இவர், கடந்த 8 ஆண்டுகளாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். அப்போது ரயில் மூலம் சென்னைக்கு செல்லும்போது இவரும், சென்னையில் மொபைல் கடையில் பணிபுரிந்து வந்த, பெரியபாளையம் அருகே உள்ள காரணி கிராமத்தைச் சேர்ந்த கவுதமன்(32) என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து, கவுதமன் தனது பெற்றோரின் எதிர்ப்பை மீறி அமுலை கடந்த 2019-ம் ஆண்டு பதிவுத் திருமணம் செய்து கொண்டுள்ளார். அப்போதுமுதல் கணவன், மனைவி இருவரும் சென்னையில் வசித்து வந்தனர். பின்னர், கடந்த ஜனவரி முதல் ஆவூர் கிராமத்தில் வசித்து வந்தனர். இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி அமுலுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

இச்சூழலில், கடந்த 17-ம் தேதி கவுதமனின் தாத்தா உயிரிழந்ததால், காரணி கிராமத்துக்குச் சென்ற கவுதமன் வீடு திரும்பவில்லை. இதனால் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக அமுலின் சகோதரர் கடந்த 20-ம் தேதி காரணி கிராமத்துக்குச் சென்றபோது, அங்கு கவுதமன் இறந்துவிட்டதாக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அமுல், "தன் கணவரை ஆணவக் கொலை செய்துவிட்டு, அவரதுஇறப்பை தன்னிடம் கவுதமனின் பெற்றோர், சகோதரர், சகோதரிகள் மறைத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், கொலை செய்யப்பட்டதற்கான தடயங்களையும், ஆதாரங்களையும் அழிக்கும் வகையில், கவுதமனின் உடலை எரித்துள்ளனர். ஆகவே, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்" என ஆரணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகார் தொடர்பாக ஆரணி போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE