ஊரக உள்ளாட்சி தேர்தலுக்காக தேமுதிகவில் 4 பொறுப்பாளர்கள்: நியமனம் செய்து விஜயகாந்த் அறிவிப்பு

ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கஉள்ள 9 மாவட்டங்களுக்கு தேமுதிக சார்பில் 4 பொறுப்பாளர்களை கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6, 9-ம் தேதிகளில் நடக்க உள்ளது. இத்தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடுவதாக அக்கட்சியின் நிறுவன தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். தேமுதிகவினர் ஆர்வமாக விருப்ப மனுவை பெற்று பூர்த்தி செய்து அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களுக்கு கட்சியின் துணை செயலாளர் எல்.கே.சுதீஷ்,திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களுக்கு கட்சியின் துணை செயலாளர் பார்த்தசாரதி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு கட்சியின் அவைத் தலைவர் வி.இளங்கோவன், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களுக்கு கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ் ஆகியோர் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிர்வாகிகள் அந்தந்த மாவட்டங்களுக்கு சென்று ஊரக உள்ளாட்சி தேர்தல் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE