டெல்லிக்குத் திகைப்பூட்டிய திராவிடப் பேரொளி அண்ணா: முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி

டெல்லிக்குத் திகைப்பூட்டிய திராவிடப் பேரொளி அண்ணா என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 113-வது பிறந்த நாள் இன்று (செப். 15) கொண்டாடப்படுகிறது. தான் முதல்வராக இருந்த காலக்கட்டத்தில் சுயமரியாதைத் திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் பெற்றுத் தந்தது, 'மெட்ராஸ் ஸ்டேட்'டுக்கு 'தமிழ்நாடு' என பெயர் சூட்டியது, இருமொழிக் கொள்கை ஆகிய மூன்றும் அளப்பரிய சாதனைகளாக கருதப்படுகிறது.

அவரின் பிறந்த நாளான இன்று அண்ணாவின் சாதனைகளை பலரும் நினைவுகூர்ந்து வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை, அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், அங்கிருந்து வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் தன் ட்விட்டர் பக்கத்தில், "அன்பால் தமிழ்நாட்டை ஆண்ட பெரியாரின் கொள்கைக் கைத்தடி; ஆயிரமாண்டு ஆரியமாயை பொசுக்கிய அறிவுத்தீ; இந்தித் திணிப்புக்கெதிராய்ப் பாய்ந்த தமிழ் ஈட்டி; தில்லிக்குத் திகைப்பூட்டிய திராவிடப் பேரொளி பேரறிஞர் அண்ணாவின் 113-வது பிறந்தநாளில் தடைகள் உடைத்து, தமிழினம் முன்னேறச் சூளுரைப்போம்!" என பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE