வாணியம்பாடி மஜக பிரமுகர் கொலையில் 7 பேர் நீதிமன்றங்களில் சரண்

By செய்திப்பிரிவு

வாணியம்பாடி முன்னாள் கவுன்சிலர் கொலை வழக்கில் தேடப்பட்ட 7 பேர் நீதிமன்றங்களில் நேற்று சரணடைந்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்தவர் வசீம் அக்ரம்(40). நகராட்சி முன்னாள் கவுன்சிலர், மனித நேய ஜனநாயக கட்சியின் முன்னாள் மாநில துணைச் செயலாளராக இருந்தார். கடந்த 10-ம்தேதி இரவு வாணியம்பாடி ஜீவா நகரில் உள்ள மசூதியில் தொழுகை நடத்தி விட்டு அவரது வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது காரில் வந்தஒரு கும்பல் அவரை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியது.

இதையடுத்து, கொலையாளிகளை பிடிக்க 10 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த வழக்கில் முக்கியகுற்றவாளியாக கருதப்படும் வாணியம்பாடி ஜீவா நகரைச் சேர்ந்த இம்தியாஸ் (39) என்பவர் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் நேற்று சரண் அடைந்தார். அவரை 7 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதித்துறை நடுவர் ராஜேஷ் கண்ணன் உத்தரவிட்டார்.

மேலும், இவ்வழக்கில் தேடப்பட்டு வந்த, காஞ்சிபுரம் மாவட்டம் மண்ணிவாக்கத்தைச் சேர்ந்த அகஸ்டின்(19), சத்தியசீலன்(20), வண்டலூர் ஓட்டேரி விரிவாக்கத்தைச் சேர்ந்த பிரவீன்குமார்(20), முனீஸ்வரன்(20), மோகனசுந்தரம் மகன் செல்வக்குமார்(21), சென்னை ஊரப்பாக்கம் அஜய்(21) ஆகிய 6 பேர் நேற்று தஞ்சாவூர் குற்றவியல் 3-வது நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்களை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE