7 மாவட்டங்களில் இன்று கனமழை வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

By செய்திப்பிரிவு

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, அம்மையத்தின் இயக்குநர் புவியரசன் இன்று (செப். 04) வெளியிட்ட அறிவிப்பு:

"வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக, இன்று நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில், இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் பெய்த அதிகபட்ச மழை அளவு (சென்டி மீட்டரில்):

ஏற்காடு (சேலம்) 13, சாத்தனூர் அணை (திருவண்ணாமலை), இளையாங்குடி (சிவகங்கை) தலா 6, ஒகேனக்கல் (தருமபுரி), ஜெயம்கொண்டம் (அரியலூர்) தலா 5, மணல்மேடு (மயிலாடுதுறை), விருத்தாச்சலம் (கடலூர்), திருவாலங்காடு (திருவள்ளூர்) தலா 4, மரக்காணம் (விழுப்புரம்), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), பொன்னை அணை (வேலூர்) தலா 3, எட்டயபுரம் (தூத்துக்குடி), காவேரிப்பாக்கம் (ராணிப்பேட்டை), ஆர்.எஸ்.மங்கலம் (ராமநாதபுரம்), அகரம் சீகூர் (பெரம்பலூர்), வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்) தலா 2, டிஜிபி அலுவலகம் (சென்னை), மதுராந்தகம் (செங்கல்பட்டு), ஊத்தங்கரை (கிருஷ்ணகிரி), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), பேராவூரணி (தஞ்சாவூர்) மங்களாபுரம் (நாமக்கல்) தலா 1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

வடக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக் கடல் பகுதியில் அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாவதன் காரணமாக,

வங்கக் கடல் பகுதிகள்

04.09.2021, 05.09.2021: மத்திய வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 - 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

அரபிக் கடல் பகுதிகள்:

05.09.2021 முதல் 07.09.2021 வரை: கேரள மற்றும் கர்நாடக கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 - 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

04.09.2021 முதல் 08.09.2021 வரை: தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்".

இவ்வாறு இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE