தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று (ஆக. 29) வெளியிட்ட அறிவிப்பு:

"வட தமிழகத்தை ஒட்டி ஆந்திர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவகாற்று காரணமாக, இன்று நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணிநேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

அடுத்த 48 மணிநேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்ச மழை அளவு (சென்டிமீட்டரில்):

சத்தியபாமா பல்கலைக்கழகம் (செங்கல்பட்டு), அவலாஞ்சி (நீலகிரி) தலா 9, சின்னக்கல்லார் (கோவை) 8, நடுவட்டம் (நீலகிரி)7, கேளம்பாக்கம் (செங்கல்பட்டு) 6, சோழிங்கநல்லூர் (சென்னை), காவேரிப்பாக்கம் (ராணிப்பேட்டை), தேவலா (நீலகிரி), வால்பாறை (கோவை) தலா 5, சோழவரம் (திருவள்ளூர்), பொண்ணை அணை (வேலூர்) தலா 4, சென்னை விமான நிலையம், சென்னை நுங்கம்பாக்கம், பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), வானமாதேவி (கடலூர்) தலா 3, பெரியார் (தேனி), ஆயிக்குடி (தென்காசி), செஞ்சி (விழுப்புரம்) தலா 2, பாபநாசம் (திருநெல்வேலி), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), ஏற்காடு (சேலம்) தலா 1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

வங்கக்கடல் பகுதிகள்:

29.08.2021: மன்னார் வளைகுடா மற்றும் தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

மீனவர்கள் இப்பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அரபிக்கடல் பகுதிகள்:

29.08.2021, 30.08.2021: கேரள மற்றும் கர்நாடக கடலோர பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்".

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE