விவசாயி தாக்கப்பட்ட வழக்கு: விஏஓ, கிராம உதவியாளர் கைது

கோவை அருகே, அன்னூரில் விவசாயி தாக்கப்பட்ட வழக்கில், கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கோவை மாவட்டம் அன்னூர் ஒட்டர்பாளையத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில், கிராம நிர்வாக அலுவலராக (வி.ஏ.ஓ) கலைச்செல்வி, கிராம உதவியாளராக முத்துசாமி ஆகியோர் பணியாற்றி வந்தனர். கடந்த 6-ம் தேதி இந்த அலுவலகத்துக்குத் தனது ஆவணங்களைப் பார்க்க கோபிராசிபுரத்தைச் சேர்ந்த விவசாயி கோபால்சாமிக்கும், விஏஓ கலைச்செல்விக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, கிராம உதவியாளர் முத்துசாமி, விவசாயி கோபால்சாமியைத் தாக்கினார். பின்னர், கோபால்சாமியின் காலில் விழுந்து, கிராம உதவியாளர் முத்துசாமி மன்னிப்பு கேட்டார்.

வீடியோ வெளியானது

இதில், முத்துசாமி காலில் விழும் வீடியோ முதலில் வெளியானது. இதைத் தொடர்ந்து, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் ஒரு வழக்கும், அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்ததாக ஒரு வழக்கும் விவசாயி கோபால்சாமி மீது வழக்குப் பதியப்பட்டது. பின்னர், முத்துசாமி விவசாயி கோபால்சாமியைத் தாக்கும் வீடியோ வெளியானது.

இது தொடர்பாக, கோபால்சாமி சம்பவம் நடந்த 6-ம் தேதியே அன்னூர் போலீஸில் விஏஓ கலைச்செல்வி, கிராம உதவியாளர் முத்துசாமி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, புகார் அளித்திருந்தார். அந்த புகார் தொடர்பாக, சிஎஸ்ஆர் சான்று மட்டும் வழங்கப்பட்டு இருந்தது. விஏஓ கலைச்செல்வி, கிராம உதவியாளர் முத்துசாமி ஆகியோர் பணியிடம் மாற்றப்பட்டதோடு, பணியிடை நீக்கமும் செய்யப்பட்டனர்.

இருவரும் கைது

இரு தரப்பு வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, கோபால்சாமியைத் தாக்கிய முத்துசாமி, உடந்தையாக இருந்த கலைச்செல்வி ஆகியோரைக் கைது செய்ய வலியுறுத்தியும், வீடியோ எடுத்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், விவசாய அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதைத் தொடர்ந்து தன்னைத் தாக்கிய முத்துசாமி, உடந்தையாக இருந்த விஏஓ கலைச்செல்வி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயி கோபால்சாமி அன்னூர் போலீஸில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் நித்யா தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர். அதன் இறுதியில். விஏஓ கலைச்செல்வி, கிராம உதவியாளர் முத்துசாமி ஆகியோர் இன்று (ஆக.27) கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக, அன்னூர் போலீஸார் கூறும்போது, "தகாத வார்த்தையில் திட்டுதல், தாக்குதல், தாக்கத் தூண்டுதல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விஏஓ கலைச்செல்வி, கிராம உதவியாளர் முத்துசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர், இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கில் வீடியோ எடுத்த நபரைத் தொடர்ந்து தேடி வருகிறோம். அவர் இன்னும் பிடிபடவில்லை" என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE