டெல்லி சிறுமியின் தாயார் புகைப்படம் வெளியான விவகாரம்: ராகுல் காந்தி மீது வழக்குப் பதியக் கோரி மதுரை நீதிமன்றத்தில் மனு

By கி.மகாராஜன்

டெல்லியில் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட சிறுமியின் தாயார் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டது தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மதுரை தாசில்தார் நகரைச் சேர்ந்தவர் முகமது ரஸ்வி. இவர் மதுரை 6-வது குற்றவியல் நடுவர் மன்றத்தில் தாக்கல் செய்த மனு:

"டெல்லியில் பட்டியல் வகுப்பைச் சேர்ந்த 9 வயதுச் சிறுமி சமூக விரோதிகளால் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக டெல்லி போலீஸார் 4 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டிற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரில் சென்று ஆறுதல் கூறினார். கொலை செய்யப்பட்ட சிறுமியின் தாயாருக்கு ஆறுதல் தெரிவித்த புகைப்படத்தை அரசியல் ஆதாயத்துக்காகத் தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி பதிவேற்றம் செய்தார்.

பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட சிறார்கள், அவர்களின் பெற்றோர்கள், உறவினர்களின் பெயர்கள், புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிடக் கூடாது என்பது சட்டமாகும். இது தொடர்பாக நீதிமன்றங்கள் பல்வேறு வழக்குகளில் உத்தரவுகளும் பிறப்பித்துள்ளன.

இவற்றை மீறும் வகையில் ராகுல் காந்தி செயல்பட்டுள்ளார். அவரை ட்விட்டரில் 19.5 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள். ராகுல் காந்தி வெளியிட்ட பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் புகைப்படத்தைக் கோடிக்கணக்கானோர் பார்வையிட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியினர் 5000 பேர் ராகுல் காந்தி வெளியிட்ட புகைப்படத்தை மறுபதிவேற்றம் செய்துள்ளனர்.

இது தொடர்பாக ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யக்கோரி மதுரை அண்ணாநகர் போலீஸில் புகார் அளித்தேன். என் புகாரின் மீது போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே என் புகாரின் பேரில் ராகுல் காந்தி, மாணிக்கம் தாகூர், கே.சி.வேணுகோபால் மற்றும் மறுபதிவேற்றம் செய்தவர்கள் மீது இளம் சிறார்கள் நீதி சட்டப் பிரிவு 74, குழந்தைகளுக்கு எதிரான போக்சோ சட்டப் பிரிவு 23 (2) மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 228 (ஏ) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்த தண்டிக்க உத்தரவிட வேண்டும்".

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி பிரவீன்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் நீலமேகம், முத்துக்குமார் ஆஜராகினர். பின்னர் விசாரணையை செப். 3-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE