அகவிலைப்படி உயர்வை உடனே வழங்கக் கோரி தமிழகம் முழுவதும் செப்.8-ல் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்: அரசுப் பணியாளர் சங்க நிர்வாகி பாலசுப்பிரமணியன் தகவல்

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை உடனேவழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செப்.8-ம் தேதி மாநிலம் முழுவதும் ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க சிறப்புத் தலைவர் கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற அச்சங்கத்தின் மாநில நிர்வாகக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்கியதுபோல, தமிழக அரசு ஊழியர்களுக்கும் எந்தவித பொருளாதார காரணங்களையும் முன்வைக்காமல், 28 சதவீத அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும்.

பொது விநியோகத் திட்டத்துக்கு தனித் துறையை அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் காலியாக உள்ள 2.5 லட்சம் அரசுப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். அரசுப் பணிகளில் ஒப்பந்த பணி முறையை கைவிட வேண்டும். டாஸ்மாக், ஊராட்சி நிர்வாகம்உள்ளிட்டவற்றில் தொகுப்பூதியத்தில் பணியாற்றுபவர்களை நிரந்தர ஊழியர்களாக்கி, அதற்கான விகிதத்தில் ஊதியம் வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.18 ஆயிரம், ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்.

இந்த கோரிக்கைகளை தமிழகமுதல்வரின் கவனத்துக்கு கொண்டுசெல்லும் வகையில், செப்.8-ம்தேதி மாநிலம் முழுவதும் ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். மேலும், முதல்வருக்கு இதுதொடர்பாக கடிதம் வழங்கிஉள்ளோம் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE