காட்பாடி ரயிலில் பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை ரயில்வே காவல் துறையினர் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
ஜோலார்பேட்டையில் இருந்து அரக்கோணம் செல்லும் வொர்க் மேன் கோச் ரயில் காட்பாடி ரயில் நிலையத்துக்கு 3-வது நடை மேடையில் நேற்று இரவு 8 மணியளவில் நின்றது. அப்போது, காட்பாடி ரயில்வே உதவி ஆய்வாளர் எழில்வேந்தன் தலைமையிலான காவலர்கள் ரயிலில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இருந்த கட்டை பையை எடுக்க முயன்றனர்.
அதில், பிறந்த சில நாட்களே ஆன பெண் பச்சிளம் குழந்தை இருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த காவல் துறையினர் குழந்தையை பத்திரமாக மீட்டனர். பின்னர், ரயில்வே மருத்துவமனையில் குழந்தையை பரிசோதித்தனர். அதில், குழந்தை நல்ல உடல் நலமுடன் இருப்பதும் பிறந்து 3 நாட்கள் ஆகி இருக்கும் என்றும் தெரியவந்தது. இந்த குழந்தையை வாணியம்பாடியில் உள்ள குழந்தைகள் காப்பகத் தில் காவல் துறையினர் ஒப்படைத்ததுடன் குழந்தையை விட்டுச் சென்றவர்கள் யார் என விசாரித்து வருகின்றனர்.