கரோனாவால் மாட்டுவண்டி மணல் குவாரிகளைத் திறக்காமல் இருப்பதா?- தொழிலாளர்கள் வேதனை

By ஜெ.ஞானசேகர்

பல்வேறு தளர்வுகள் அமலில் உள்ள நிலையில் கரோனாவைக் காரணம் காட்டி மாட்டு வண்டிகளுக்கான மணல் குவாரிகளைத் திறக்காமல் இருப்பது நியாயமில்லை என்று திருச்சி போராட்டத்தில் ஈடுபட்ட மணல் மாட்டுவண்டித் தொழிலாளர்கள் வேதனை தெரிவித்தனர்.

மாட்டு வண்டிகளுக்கான மணல் குவாரிகளைத் திறக்க வலியுறுத்தி சிஐடியு சார்ந்த திருச்சி மாவட்ட மணல் மாட்டு வண்டித் தொழிலாளர்கள் சங்கத்தினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சங்கத்தின் தலைவர் ஜி.கே.ராமர் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், சங்கச் செயலாளர் கே.சேகர், சிஐடியு மாவட்டச் செயலாளர்கள் எஸ்.ரங்கராஜன், கே.சிவராஜ், தலைவர் எம்.பன்னீர்செல்வம் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.

இந்தப் போராட்டத்தில், "கரோனா பரவலைக் காரணம் காட்டி மாட்டு வண்டிகளுக்கான மணல் குவாரிகள் மே மாதம் மூடப்பட்டன. ஆனால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையிலும், மணல் குவாரிகளைத் திறக்காமல் இருப்பது நியாயமில்லை.

குவாரிகள் திறக்கப்படாததால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து, அவர்களது குடும்பத்தினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, மாட்டுவண்டிகளுக்கான மணல் குவாரிகளை அரசு உடனடியாகத் திறக்க வேண்டும்" என்று வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் சு.சிவராசுவைச் சந்தித்து, கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

முன்னதாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, “உச்ச நீதிமன்றம், சுற்றுச்சூழல் துறை, கனிம வளம் ஆகிய துறைகளின் வழிகாட்டுதலின்படி மாதவப்பெருமாள் கோயில், தாளக்குடி ஆகிய இடங்களில் மாட்டு வண்டிகளுக்கான மணல் குவாரிகள் செயல்பட்டு வந்த நிலையில், கரோனா ஊரடங்கையொட்டி அவை கடந்த மே மாதம் மூடப்பட்டன.

ஆனால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அமலுக்கு வந்துவிட்ட நிலையில், மாட்டு வண்டிகளுக்கான மணல் குவாரிகள் மட்டும் திறக்கப்படவில்லை. இதனால், மாடுகளுக்குத் தீவனம் வைக்க முடியாததுடன், குடும்பத்தையும் நடத்த முடியவில்லை. எனவே, மாட்டு வண்டிகளுக்கான மணல் குவாரிகளைத் திறக்க வலியுறுத்தி காத்திருப்புப் போராட்டம் நடத்தினோம்" என்று தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE