குழந்தைகள் பிறந்து 6 மாதம் வரை தாய்ப்பால் அவசியம்: உலக தாய்ப்பால் வார விழாவில் தாய்மார்களுக்கு அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

குழந்தைகள் பிறந்தது முதல் 6 மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என உலக அளவில் பரிந்துரைக்கப்படுகிறது, என்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் பேசினார்.

நாமக்கல் நகராட்சி திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டப்பணிகள் துறையின் சார்பில் உலக தாய்ப்பால் வார விழா நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தலைமை வகித்துப் பேசியதாவது:

மகளிரும், குழந்தைகளும் நலமுடன் வாழ்ந்தால் மாநிலம் செழிக்கும் என்பதை கருத்தில் கொண்டு தாய்க்கும், சேய்க்கும் பல நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் உலகத் தாய்ப்பால் வாரம் ஆக., 1 முதல் 7-ம் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது.

பிறந்த குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கும், மேம்பாட்டிற்கும் தேவையான ஊட்டச்சத்துகள் தாய்ப்பாலில் மட்டுமே சரிவிகிதத்தில் உள்ளது. தாய்ப்பால் கொடுப்பது தாயின் உடல் நலத்திற்கும் மிகவும் நல்லது. குழந்தை பிறந்தது முதல் 6 மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்று உலக அளவில் பரிந்துரைக்கப்படுகிறது.

குழந்தைகளுக்கு தாய்ப்பால்கொடுப்பதால் குள்ளத்தன்மை, மெலிவுத்தன்மை, எடைகுறைபாடுபோன்ற ஊட்டச்சத்து குறைபாடில்லாத ஆரோக்கியமான குழந்தையாக வளருவர். 6 மாதங்களுக்கு பிறகு தாய்ப்பாலுடன் கூடுதல் உணவு கொடுக்க வேண்டும்.

சீம்பால் குழந்தைகளுக்கு முதல் தடுப்பு மருந்தாகும். எளிதில் ஜீரணமாகக் கூடிய அனைத்து ஊட்டச்சத்துக்களும் உள்ளடக்கியது. கண்பார்வைக்குத் தேவையான வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ளது. சீம்பாலில் உள்ள வெள்ளை அணுக்கள் வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை போன்ற நோய்த்தொற்றுகளை தடுத்து குழந்தைகளை ஆரோக்கியமாக வைக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், தாய்ப்பால் வார உறுதிமொழி எடுக்கப்பட்டது. மேலும், தாய்ப்பாலின் மகத்துவம், ஊட்டச்சத்தின் அவசியம் குறித்தவிளக்க கண்காட்சி மற்றும் காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள் உள்ளிட்ட ஊட்டச்சத்து உணவுப் பொருட்கள் கண்காட்சியை ஆட்சியர் பார்வையிட்டார். மேலும், கொழுகொழு குழந்தைகளுக்கான போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளின் தாய்மார்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் மாவட்ட திட்ட அலுவலர் வி.ஜான்சி ராணி, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, குழந்தைகள் நலத்துறை இணை பேராசிரியர் சுரேஷ்கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE