மதுசூதனன் உடலுக்கு சசிகலா நேரில் அஞ்சலி

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடலுக்கு சசிகலா நேரில் அஞ்சலி செலுத்தினார்.

அதிமுக அவைத்தலைவரும் அக்கட்சியின் மூத்த தலைவருமான மதுசூதனன், கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை மோசமடையவே, கடந்த மாதம் சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இரு தினங்களுக்கு முன் அவரது உடல்நிலை கவலைக்கிடமானது. இந்நிலையில், நேற்று (ஆக. 05) மாலை அவர் காலமானார். அவரது உடல், தண்டையார்பேட்டையில் உள்ள அவரின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அக்கட்சியின் முக்கியத் தலைவர்கள், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு உள்ளிட்டோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், அவரது உடலுக்கு சசிகலா நேரில் அஞ்சலி செலுத்தினார். அவருடைய குடும்பத்தாருக்கு சசிகலா ஆறுதல் தெரிவித்தார்.

நேரில் அஞ்சலி செலுத்திய சசிகலா.

முன்னதாக, மதுசூதனன் மறைவுக்கு ஆடியோ வாயிலாக இரங்கல் தெரிவித்திருந்த சசிகலா, அவருடைய மறைவு அதிமுகவுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு எனவும், எம்ஜிஆர் - ஜெயலலிதா காலத்தில் சோதனை நேரும்போதெல்லாம் உடன் நின்றவர் எனவும் குறிப்பிட்டார்.

மதுசூதனன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதே, சசிகலா நேரில் சென்று அவரின் உடல்நிலை குறித்து விசாரித்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE