மம்தா பானர்ஜியிடமிருந்து அழைப்பு வந்தால் இணைந்து செயல்படுவோம்: கமல்

By பெ.ஸ்ரீனிவாசன்

மம்தா பானர்ஜியிடமிருந்து அழைப்பு வந்தால் இணைந்து செயல்படுவோம் என, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, கோவையில் செய்தியாளர்களிடம் இன்று (ஆக. 03) அவர் கூறியதாவது:

"எனது படத்தையும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்தையும் இணைத்து மீம் உருவாக்கிப் பகிர்வது, அந்தக் குறிப்பிட்ட கட்சியினரின் நடத்தை மற்றும் மாண்பை வெளிக்காட்டுகிறது. எங்கள் கட்சியில் அந்தத் தவறை யாரும் செய்ய மாட்டார்கள்.

நாட்டில் தற்போது நியாயம் சொல்லும் அமைப்புகளை ஒவ்வொன்றாக மூடி வருகின்றனர். சினிமா விவகாரத்திலும் இதே நிலைதான். அனைத்து முறையீட்டு மையங்களையும் தகர்த்து எறிந்துவிட்டால், யாரும் யாரிடமும் முறையிட முடியாது. அரசு தன்போக்கில் செயல்படலாம் என்பதே இதன் நோக்கம்.

பெகாசஸ் உளவு விவகாரத்தைப் பொறுத்தவரை நாடாளுமன்றத்தில் தற்போது என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறதோ, அதுவே எனது கருத்தாக உள்ளது. எனது அந்தரங்க வாழ்க்கையை உளவு பார்ப்பது ஏற்புடையது அல்ல.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி: கோப்புப்படம்

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி என்னை விட மூத்த அரசியல்வாதி. வரும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, மத்தியில் பாஜகவுக்கு எதிரான அணியை திரட்டும் முயற்சியில் உள்ளார். சூழல் இருந்தால், அவரிடமிருந்து அழைப்பு வந்தால் இணைந்து செயல்படுவோம்".

இவ்வாறு கமல் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE