கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த, ஈரோட்டைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ராஜேந்திரன், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
ஈரோடு, ரங்கம்பாளையத்தைச் சேர்ந்தவர் ம.ராஜேந்திரன் (52). இவர் தனியார் தொலைக்காட்சி செய்தியாளராகப் பணிபுரிந்து வந்தார். இவர், உடல்நலம் பாதிக்கப்பட்டு, ஈரோடு மற்றும் வேலூர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார். சிகிச்சையின்போது, ராஜேந்திரனுக்கு கரோனா தொற்று உறுதியானது.
இதனையடுத்து, மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சைப் பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தார்.
கரோனா பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி, அவரது இறுதிச்சடங்கு அரும்பாக்கம் மின் மயானத்தில் இன்று (ஜூலை 16)) நடைபெற்றது. அவரது மறைவுக்குப் பத்திரிகையாளர்கள், பத்திரிகையாளர் அமைப்புகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மறைந்த செய்தியாளர் ராஜேந்திரனுக்கு மனைவி மற்றும் இரு மகன்கள் உள்ளனர்.