100-வது வயதில் சங்கரய்யா; முன்னுதாரணத் தோழருக்கு என் வந்தனங்கள்: கமல் வாழ்த்து

By செய்திப்பிரிவு

முன்னுதாரணத் தோழருக்கு என் வந்தனங்கள் என, 100-வது வயதில் அடியெடுத்து வைக்கும் மூத்த இடதுசாரித் தலைவர் என்.சங்கரய்யாவுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான என்.சங்கரய்யா ஜூலை 15 (நாளை) தன் 100-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். தொழிலாளர் நலன் சார்ந்த பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தியவர் சங்கரய்யா. இவருடைய 100-வது பிறந்த நாளை முன்னிட்டு, பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்த தலைவர்களும் கடந்த சில தினங்களாகவே வாழ்த்துகளைக் கூறிவருகின்றனர்.

மேலும், சங்கரய்யாவின் 100-வது பிறந்த நாள் விழாவை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, கமல்ஹாசன் இன்று (ஜூலை 14) தன் ட்விட்டர் பக்கத்தில், " 'வறுமையின் நிறம் சிவப்பு அல்ல; வறுமையைப் போக்க வந்த நிறமே சிவப்பு' என முழங்கிய என்.சங்கரய்யா 100-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். விடுதலைப் போர் தொடங்கி இன்று வரை நீளும் நெடிய போராட்ட வரலாற்றினைக் கொண்ட முன்னுதாரணத் தோழருக்கு என் வந்தனங்களும் வாழ்த்துகளும்" எனப் பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE