கொலையான ஏடிஎம் காவலாளி குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

By கி.மகாராஜன்

ஏடிஎம் கொள்ளையின் போது கொலை செய்யப்பட்ட காவலாளி குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் இடைக்கால நிவாரணம் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை வாடிப்பட்டி அருகே தாதம்பட்டியைச் சேர்ந்த ராஜம்மாள் , உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

என் கணவர் பன்னீர்செல்வம், எஸ்பிஐ தனிச்சியம் கிளை ஏடிஎம் மையத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். 2013-ல் என் கணவர் பணியிலிருந்த போது கொள்ளையர்கள் என் கணவரை கொலை செய்து ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர். இயந்திரத்தை உடைக்க முடியாததால் பணம் கொள்ளையடிக்க முடியாமல் கொள்ளையர்கள் திரும்ப சென்றனர். இது தொடர்பாக வாடிப்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

என் கணவரின் வருமானத்தை வைத்தே குடும்பம் நடத்தி வந்தோம். கணவர் இறப்பால் எங்கள் குடும்பம் வறுமையில் வாடுகிறது. எனவே எங்கள் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கவும், கணவர் கொலை வழக்கை விரைவில் முடிக்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கருணாநிதி வாதிட்டார்.
பின்னர், மனுதாரரின் கணவர் கொலை வழக்கு 8 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இதனால் மனுதாரருக்கு அரசு ரூ.3 லட்சம் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். வாடிப்பட்டி நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் மனுதாரர் கணவர் கொலை வழக்கை 4 வாரத்தில் முடிக்க வேண்டும். வழக்கின் தீர்ப்பில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்குவது குறித்தும் தெரிவிக்க வேண்டும். ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது குறித்து

ஆகஸ்ட் 4-ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE