கனமழையால் பாலாற்றில் நீர்வரத்து: புல்லூர் தடுப்பணை நீருக்கு மலர் தூவி வரவேற்பு

By வ.செந்தில்குமார்

தமிழக- ஆந்திர எல்லை வனப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள புல்லூர் நிரம்பி வழிகிறது. புல்லூர் தடுப்பணை பகுதியில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா பார்வையிட்டதுடன் வெள்ள நீரை மலர் தூவி வரவேற்றார்.

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச் சலனத்தின் காரணமாக ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கும் மேலாகத் தொடர் மழை பெய்து வருகிறது. இரவு நேரத்தில் பலத்த இடியுடன் கனமழை பெய்து வருவதால் ஓடை, கானாறு, பாலாறு மற்றும் அதன் துணை ஆறுகளில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.

வாணியம்பாடி அடுத்துள்ள கொடையாஞ்சி பகுதியில் நேற்று (ஜூலை 2) இரவு பலத்த சூறைக் காற்றுடன் பெய்த கனமழையால் மரங்கள் சாய்ந்து மின்கம்பிகள் அறுந்து விழுந்தன. இதனால், அம்பலூர், ராமநாயக்கன்பேட்டை, ஆவாரங்குப்பம், திம்மாம்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. மின்வாரிய ஊழியர்கள் இரவிலும் சீரமைப்புப் பணிகளைத் தொடங்கி நள்ளிரவில் மின்விநியோகத்தை உறுதி செய்தனர்.

மழையளவு விவரம்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இன்று (ஜூலை 3) காலை 8 மணி நிலவரப்படி வேலூரில் 38.40, குடியாத்தம் 25.20, காட்பாடி 40.60, மேல் ஆலத்தூர் 33.20, பொன்னை 49.20, அம்முண்டியில் உள்ள வேலூர் கூட்டுறவுச் சர்க்கரை ஆலை பகுதியில் 57 மி.மீ. மழை பதிவாகி இருந்தது. திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆலங்காயம் 12.20, ஆம்பூர் 6.40, ஆம்பூர் கூட்டுறவுச் சர்க்கரை ஆலை பகுதியில் 16.60, வாணியம்பாடி 16 மி.மீ. மழை பதிவானது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் 6.20, ஆற்காடு 5, காவேரிப்பாக்கம் 15, சோளிங்கர் 26, வாலாஜா 7, அம்மூர் 64, கலவை 48.20 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

நிரம்பிய புல்லூர் தடுப்பணை

கர்நாடக மாநிலம் நந்தி மலையில் உருவாகி, ஆந்திரா வழியாக வரும் பாலாறு தமிழகத்தில் புல்லூரில் நுழைகிறது. தமிழக-ஆந்திர எல்லையில் உள்ள வனப்பகுதியில் கடந்த மூன்று நாட்களாகப் பெய்துவரும் கனமழையால் ஆந்திர மாநில அரசால் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள புல்லூர் தடுப்பணை இன்று அதிகாலை முழுமையாக நிரம்பி வெள்ள நீர் வெளியேறியது. புல்லூர் தடுப்பணையில் இருந்து சில நூறு மீட்டர் தொலைவில் தமிழக பாலாறு எல்லை தொடங்குவதால் நீர்வரத்தும் அதிகமாக இருக்கிறது.

அடுத்த ஒருசில நாட்கள் மழை பெய்யும் என்பதாலும் வனப்பகுதியில் இருந்து பாலாற்றுக்குத் தொடர்ந்து நீர்வரத்து இருக்கும் என்பதாலும் மேல் பாலாற்றுப் பகுதிகளான அம்பலூர், ஆவாரங்குப்பம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் பாலாற்றுப் படுகைகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

இந்நிலையில், புல்லூர் தடுப்பணையில் இருந்து வெள்ள நீர் கடந்து செல்லும் பகுதியை மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா இன்று பார்வையிட்டார். அவருடன் திருப்பத்தூர் சார் ஆட்சியர் அலர்மேல் மங்கை, வாணியம்பாடி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில்குமார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உடனிருந்தனர். மேலும், பாலாற்றில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளதால் தடுப்பணை பகுதியில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் மலர் தூவி வரவேற்றனர்.

தற்காலிகச் சந்தை பாதிப்பு

வேலூர் மாநகராட்சியில் கரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் காய்றி மொத்த வியாபாரம் மாங்காய் மண்டி அருகில் உள்ள மைதானத்தில் தற்காலிகமாக இயங்கி வருகிறது. இங்கு 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்குத் தற்காலிகக் கூடாரம் அமைத்து வியாபாரம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். நேற்று பெய்த கனமழையால் தற்காலிக மார்க்கெட்டில் குளம் போல் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறியது. மழையால் தக்காளி, கேரட், பீன்ஸ், முள்ளங்கி உள்ளிட்ட காய்கறிகள் சேதமடைந்ததால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர். தண்ணீர் தேங்காத பகுதிக்கு மொத்த வியாபாரச் சந்தையை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

வேலூர் மாங்காய் மண்டி அருகேயுள்ள தற்காலிக மைதானம் கனமழையால் சேறும் சகதியுமாக மாறியுள்ளது.

வேலூர், காட்பாடி, திருவலம் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாகப் பெய்து வரும் மழை காரணமாக பூட்டுத்தாக்கு பாலாற்றில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE