காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு காவல்துறை மூலம் விழிப்புணர்வு வகுப்புகள்: காஞ்சிபுரம் சரக டிஐஜி சத்யபிரியா தகவல்

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் சரகத்துக்கு உட்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு ஆன்-லைன் மூலம் விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்படும் என்று காஞ்சிபுரம் சரக டிஜஜி சத்யபிரியா தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காஞ்சிபுரம் சரகத்துக்கு உட்பட்ட மாவட்டங்களில் ரவுடிகளை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவர்களை ஒடுக்குவதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆராய்ந்து வருகிறோம். அதேபோல் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் வெளிமாநிலங்களில் இருந்து கடத்தப்படாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போது பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஆன்-லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவர்கள் செல்போன் பயன்படுத்துவதால் சமூகவலைதளங்கள் மூலம் சில இன்னல்களை சந்திக்க வேண்டி வருகிறது. இதனால் போலீஸார் மூலம்சைபர் கிரைம் சட்டம், போக்சோசட்டம், மாணவிகளின் பாதுகாப்புக்கான சட்டங்கள் குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மேலும், செல்போன் மூலம் ஆன்-லைன் விளையாட்டுகளில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஈடுபடுவதால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

காஞ்சிபுரம் சரகத்தில் உள்ள 3 மாவட்டங்களிலும் 12 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அந்த கேமராக்கள் தெளிவானதாக இருக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். மேலும் புதிதாக கேமராபொருத்த வேண்டிய இடங்கள் குறித்து ஆய்வு செய்யும்படி கூறியுள்ளோம். அந்த இடங்களில் புதிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ரவுடிகளையும், போதைப் பொருள் பயன்பாட்டையும் தடுக்க முக்கியத்துவம் அளிக்கப்படும். இதுவரை கடந்த ஒரு மாதத்தில் சுமார் 25 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE