புதுச்சேரியில் 175 பேருக்கு கரோனா தொற்று: மேலும் 8 பேர் உயிரிழப்பு

By அ.முன்னடியான்

புதுச்சேரியில் புதிதாக 175 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,759 ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் இன்று (ஜூலை 2) வெளியிட்ட தகவலில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 8,315 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி - 131, காரைக்கால் - 27, ஏனாம் - 2, மாஹே - 15 பேர் என மொத்தம் 175 (2.10 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், புதுச்சேரியில் 6 பேர், காரைக்காலில் ஒருவர், ஏனாமில் ஒருவர் என 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,759 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.50 சதவீதமாக உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 17 ஆயிரத்து 640 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 326 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 1,906 பேர் என மாநிலம் முழுவதும் மொத்தம் 2,232 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று 276 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 13 ஆயிரத்து 649 (96.61 சதவீதம்) ஆக உள்ளது. இதுவரை 13 லட்சத்து 24 ஆயிரத்து 645 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.

இதில் 11 லட்சத்து 37 ஆயிரத்து 559 பரிசோதனைகள் ‘நெகடிவ்’ என்று முடிவு வந்துள்ளது. மேலும், சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தம் 5 லட்சத்து 7 ஆயிரத்து 340 பேருக்கு (2வது டோஸ் உட்பட) தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE