தமிழகத்தில் நாளை முதல் நியாயவிலைக் கடைகள் இயங்கும் நேரம் அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில், நாளை முதல் நியாயவிலைக் கடைகள் காலை 9 மணி முதல்- 12.30 மணி வரையிலும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையும் செயல்படும் என உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:

வரும் 8ம் தேதி முதல் சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் காலை 9 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் நியாயவிலைக் கடைகள் செயல்படும். இந்த வேலை நேரம் மறு உத்தரவு வரும் வரை நடைமுறையில் இருக்கும்.

கரோனா நிவாரண நிதி இரண்டாம் தவணைத் தொகை ரூ.2000 மற்றும் 14 பொருட்கள் அடங்கிய மளிகைப் பொருள் தொகுப்பினை 15ம் தேதி முதல் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் பெற்றுச் செல்ல ஏதுவாக டோக்கன்கள் விநியோகத்தினை 11.06.2021 முதல் 14.06.2021 முடிய கடைப்பணியாளர்கள் பிற்பகல் நேரங்களில் அட்டைதாரர்களின் வீடுகளுக்கு சென்று வழங்க வேண்டும்.

11.06.2021 முதல் 14.06.2021 முடிய முற்பகல் நேரத்தில் நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பண்டங்களை வழக்கம்போல் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE