கரும்பூஞ்சைக்கான மருந்தை கள்ளச்சந்தையில் விற்றால் நடவடிக்கை; கே.என்.நேரு

By ஜெ.ஞானசேகர்

கருப்பு பூஞ்சைக்கான மருந்தை கள்ளச்சந்தையில் விற்பதாக ஆதாரப்பூர்வமாக புகார் கொடுத்தால், உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் 98-வது பிறந்த நாள் மற்றும் சுற்றுச்சூழல் நாளையொட்டி வனத்துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில், திருச்சி மாவட்டத்தில் மரக்கன்றுகள் நடும் பணி இன்று (ஜூன் 06) தொடங்கியது.

திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில், மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தலைமையில் மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு மரக்கன்றுகளை நட்டு, பணியைத் தொடக்கி வைத்தார்.

தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது:

"கருப்பு பூஞ்சைக்கான மருந்து மருத்துவமனைகளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. வெளிச்சந்தைக்கு தரப்படுவதில்லை. திருச்சி மாவட்டத்துக்கு 50 மருந்துகள் மட்டுமே வந்தன. அவை மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.

கருப்பு பூஞ்சைக்கான மருந்து, கள்ளச்சந்தையில் விற்பதாக ஆதாரப்பூர்வமாக புகார் அளித்தால் உடனடியாக சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவர்.

தனியார் மருத்துவமனைகளுக்கு மத்திய அரசே நேரடியாக வழங்குகிறது. மாநிலத்திலேயே திருச்சி மாவட்டத்தில்தான் அதிக எண்ணிக்கையில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கரோனா தடுப்பூசிகள் வந்தவுடன் மக்களுக்கு செலுத்தப்படும்.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில், முதல்கட்டமாக திருச்சி மாநகரில் சாலையோரங்களில் மின் கம்பிகள் இல்லாத பகுதிகளில் 25,000 மரக்கன்றுகள் நடும் பணி இன்று தொடங்குகிறது. மரக்கன்றுகள் நடுவதுடன் மட்டுமின்றி, அவை சமூக சேவை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டு பராமரிக்கப்படவுள்ளன.

மேலும், திருச்சி மாநகரில் பயன்பாட்டில் இல்லாத மாநகராட்சி பூங்காக்களில் மியாவாக்கி முறையிலான அடர் காடு வளர்ப்புத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மாநகராட்சிப் பகுதி மட்டுமன்றி அனைத்து நகராட்சி, பேரூராட்சி ஆகிய பகுதிகளிலும் மரக்கன்றுகள் நடும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்படும். மரக்கன்றுகள் நடுவதுடன் அவை முறையாக பராமரிக்கப்படும்".

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அ.சவுந்தரபாண்டியன், எஸ்.ஸ்டாலின் குமார், மாவட்ட வன அலுவலர் சுஜாதா, மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன், மாநகராட்சி முதன்மைப் பொறியாளர் அமுதவல்லி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து, லால்குடி வட்டம் பல்லவபுரத்தில் மியாவாக்கி முறையிலான அடர் காடு வளர்ப்புத் திட்டத்தை அமைச்சர் கே.என்.நேரு தொடக்கி வைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE