தமிழகத்திலேயே முதல்முறை: கோவையில் பிரத்யேக யானை விழிப்புணர்வு மையம் 

தமிழகத்தில் முதல்முறையாகக் கோவையில் யானைகள் குறித்த பிரத்யேக விழிப்புணர்வு மையம் உருவாக்கப்பட்டுள்ளது.

வனத்தைப் பாதுகாப்பதிலும், வன வளத்தைப் பெருக்குவதிலும் யானைகளின் பங்கு குறிப்பிடத்தக்கது. எனினும் யானைகள் குறித்த பல்வேறு தகவல்களைத் தெரிந்துகொள்வதற்கான பிரத்யேக மையம் தமிழகத்தில் எங்குமே இல்லை. இந்நிலையில், கோவை மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில், வனத்துறை மரக் கிடங்கு வளாகத்தில், 'வேழம் இயலியல்' என்ற விழிப்புணர்வு மையம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தில் பல்வேறு இன யானைகளின் விவரங்கள் தொகுக்கப்பட்டு, காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இயற்கைக்கும் யானைக்குமான தொடர்பு, மனிதனுக்கும் யானைக்குமான தொடர்பு, மனிதர்களால் யானைகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள், ஏன் அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்பன குறித்த விளக்கங்கள் இங்கு இடம்பெற்றுள்ளன.

இதுகுறித்துக் கோவை மண்டலக் கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் ஐ.அன்வர்தீன் கூறும்போது, ''யானைக்குத் தமிழில் உள்ள பெயர்களில் ஒன்றான 'வேழம்' என்ற பெயரில் இந்த மையம் உருவாக்கப்பட்டுள்ளது. உதகை, கோத்தகிரி செல்லும் வழியில் அறிவியல் சார்ந்த பொழுதுபோக்கு இடமாகவும், பள்ளிக் குழந்தைகள் கண்டுகளிக்கும் முக்கிய இடமாகவும் இது இருக்கும். இந்த மையத்துக்கு வெளியே பட்டாம்பூச்சிப் பூங்காவும் அமைய உள்ளது. மையத்தின் உள்ளரங்கப் பணிகள் நிறைவடைந்துவிட்டன.

வெளியில் பூங்கா அமைக்கும் பணிகள் நிறைவடைய இன்னும் 3 மாதங்கள் ஆகும். கிராம வனக்குழுக்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள கோவை மாவட்ட வன வளர்ச்சி முகமை சார்பில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கோவையில் உள்ள சூழல் சுற்றுலாக் குழுக்கள் தங்கள் வருவாயில் இருந்து இந்த மையத்தை உருவாக்குவதற்கான நிதியை அளித்துள்ளன.

அனைத்துப் பணிகளும் முழுமை பெற்றவுடன் பொதுமக்கள் பார்வைக்கு இந்த மையம் திறக்கப்படும். இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆலோசகர் சிரில் உள்ளிட்டோர் இந்த மையத்தின் வடிமைப்பில் உதவி வருகின்றனர்'' என்று ஐ.அன்வர்தீன் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE