காணாமல் போன தமிழக மீனவர்களை மீட்க முயற்சி: டி.ஆர்.பாலுவுக்கு ராஜ்நாத் சிங் பதில் கடிதம்

By செய்திப்பிரிவு

காணாமல் போன தமிழக மீனவர்களை மீட்க, இந்திய கடலோரக் காவல் படை முயற்சி செய்வதாக, டி.ஆர்.பாலு எம்.பி.க்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பதில் கடிதம் எழுதியுள்ளார்.

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் லட்சத் தீவு அருகில் படகுக் கோளாறால் காணாமல் போனதை அடுத்து, தமிழக மீனவர்களை மீட்டுத் தரக் கோரி, தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை புதுடெல்லியில், அவரது இல்லத்தில், கடந்த மே 21-ம் தேதி அன்று, திமுக பொருளாளரும், நாடாளுமன்ற திமுக குழு தலைவருமான டி.ஆர்.பாலு நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.

மேலும், தமிழக மீனவர்களை மத்திய கடலோரக் காவல் படையினரின் உதவியுடன் உடனடியாக மீட்டுத் தர வேண்டுமென்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாதுகாப்புத் துறை அமைச்சருக்குக் கடந்த மே மாதத்தில் கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், டி.ஆர்.பாலுவுக்கு எழுதிய பதில் கடிதத்தில், "தமிழக மீனவர்களைத் தேடும் பணியைத் துரிதப்படுத்த, கடலோரக் காவல் படையினரின் தலைமை அதிகாரிகளுக்குத் தேவையான முயற்சிகளை எடுக்குமாறு, உத்தரவு பிறப்பித்துள்ளேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE