தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சடலங்களுக்கான பேக்கிங் கிட் பற்றாக்குறை: முறையாக பேக் செய்யாததால் உறவினர்கள் சிரமம்

By என்.கணேஷ்ராஜ்

தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் கரோனாவால் இறந்தவர்களின் உடலை பேக்கிங் செய்வதற்கான கிட் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதனால், பிளாஸ்டிக்கில் முழுமையாக சுற்றி வைக்கப்பட்டுள்ளதால் உடலை இனங்காண்பதில் உறவினர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது.

தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிறப்பு சிகிச்சை வார்டு உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இணைநோய், சுவாசப்பிரச்னை, ஆக்சிஜன் பற்றாக்குறை, நெகட்டிவ்விற்கு மாறியவர்கள் என்று தனித்தனியே சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தினமும் சிகிச்சைப் பலனின்றி நோயாளிகள் உயிரிழப்பதும் நடந்து வருகிறது. இந்த உடல்கள் மருத்துவமனையின் பின்புறம் உள்ள பிணவறையில் சுகாதாரத்துறை வழிகாட்டலின்படி பேக்கிங் செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பேக்கிங் கிட் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே பிளாஸ்டிக்கில் முழுமையாக பேக்கிங் செய்து பிணவறையில் வைக்கப்படுகிறது. இறந்தவர் பெயர் குறித்த விவரம் குறிப்பிடாமல் இருப்பதால் உடலை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது.

இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், "இறந்தவரின் உறவினர்கள் இங்கு வந்து ஒவ்வொரு உடலின் முகத்தை திறந்து பார்த்து பின்பு எடுத்துச் செல்லும் நிலை உள்ளது.

இதனால் நோய்த் தொற்று அபாயம் ஏற்படுகிறது. இறுதிகாரியம், தகனம் உள்ளிட்ட காரியங்களில்போது உறவினர்களுக்கும் பரவும் வாய்ப்பு உள்ளது. எனவே உடல்களை அடையாளப்படுத்தவும், பணியாளரே இவற்றை எடுத்துதரவும் உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும்" என்றனர்.

மருத்துவக்கல்லூரி டீன் பாலாஜிநாதன் கூறுகையில், "இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், இதுபோன்ற நிலையை மாற்றுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது " என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE