அண்ணா பல்கலை எம்.டெக் படிப்பு மாணவர் சேர்க்கை காலக்கெடுவை நீட்டிக்கக் கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் 

By செய்திப்பிரிவு

அண்ணா பல்கலைக்கழகத்தில் இரு எம்.டெக். படிப்புகளின் மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடுவை நீட்டிக்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, மத்திய - மாநில அரசுகள், அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின் நிதியுதவியுடன், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.டெக். பயோ டெக்னாலஜி மற்றும் கம்ப்யூடேஷனல் பயாலஜி ஆகிய இரு படிப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் மாணவர் சேர்க்கையின்போது தமிழக அரசின் 69 சதவீத இட ஒதுக்கீட்டைப் பின்பற்றக் கூடாது எனவும், மத்திய அரசின் 49.5 சதவீத இட ஒதுக்கீட்டைப் பின்பற்ற வேண்டும் எனவும் மத்திய அரசு வற்புறுத்தியது.

இதனால், 2020-21ஆம் கல்வியாண்டில் இந்த இரு எம்.டெக். படிப்புகளையும் ரத்து செய்து அண்ணா பல்கலைக்கழகம், கடந்த ஜனவரியில் அறிவித்தது. இதனால், 45 மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி நுழைவுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவ - மாணவிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றி மாணவர் சேர்க்கையை நடத்த அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டது. அதேபோல, மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடுவை நீட்டிக்க அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமத்துக்கும் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், 45 இடங்களைக் கொண்ட இந்த இரு படிப்புகளுக்கும் சேர்த்து 12 பேருக்கு மட்டும் சேர்க்கை வழங்கப்பட்டுள்ளதாகக் கூறி, குழலி என்ற மாணவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அவர் தனது மனுவில், “45 இடங்களில் 12 இடங்கள் வழங்கப்பட்டது போக மீதமுள்ள 33 இடங்களுக்கான மாணவர் சேர்க்கைப் பட்டியலை வெளியிடக் கோரி அனுப்பிய மனுவுக்கு பதிலளித்த மத்திய அரசு, மார்ச் 20ஆம் தேதி வரை மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்த அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிவித்தது.

அதனால், மாணவர் சேர்க்கை நடத்தப்படாமல் காலியாக உள்ள 33 இடங்களுக்கும் சேர்க்கை நடத்தும் வகையில் காலக்கெடுவை நீட்டிக்க அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமத்துக்கு உத்தரவிட வேண்டும்” எனக் கோரியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், மனுவுக்கு ஜூன் 1ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, மத்திய - மாநில அரசுகளுக்கும், அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்துக்கும் உத்தரவிட்டு, விசாரணையைத் தள்ளிவைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE