வேலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.10 கோடிக்கு காய்கறி, மளிகை விற்பனை; திடீர் விலை உயர்வால் பொதுமக்கள் பாதிப்பு

வேலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.10 கோடிக்கு காய்கறி மற்றும் மளிகைப் பொருட்கள் விற்பனையாகியுள்ளன. ஊரடங்கை முன்னிட்டு காய்கறி விலை திடீரென உயர்த்தப்பட்டதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

தமிழகத்தில் அதிகரித்து வரும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மே 24-ம் முதல் 31-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி, பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை சிரமமின்றி வாங்கிச் செல்ல சனிக்கிழமை மாலை முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணி வரை அனைத்துக் கடைகளையும் திறக்க அரசு அனுமதியளித்து.

அதன்படி, வேலூர் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு மேல் ஒருசில பகுதிகளில் கடைகள் திறக்கப்பட்டன. அன்று பெரும்பாலான கடைகள் திறக்காத நிலையில், நேற்று (மே 23) ஞாயிற்றுக்கிழமை காலையில் அனைத்துக் கடைகளும் வழக்கம்போல திறக்கப்பட்டன.

வேலூர் மார்க்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் மளிகைக் கடைகளில் பொருட்களை வாங்கப் பொதுமக்கள் கூட்டம், கூட்டமாகக் குவிந்தனர். இது தவிர, காட்பாடி, சத்துவாச்சாரி, தொரப்பாடி பகுதியில் உள்ள தற்காலிக காய்கறி மார்க்கெட்டில் கட்டுக்கடங்காமல் பொதுமக்கள் குவிந்தனர். இதனால் அரசின் கரோனா விதிமுறைகள் காற்றில் பறக்கவிடப்பட்டன. வருவாய் மற்றும் காவல் துறையினர் இதையெல்லாம் கண்டுகொள்ளாததால் அடுத்து வரும் நாட்களில் கரோனா தொற்று மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

பொதுமக்களின் ஆர்வத்தைக் கண்ட காய்கறி வியாபாரிகள் வழக்கத்தைக் காட்டிலும் 2 மடங்கு விலையை உயர்த்தி கூடுதல் விலைக்கு காய்கறிகளை விற்பனை செய்தனர். இதனால், பொதுமக்கள் வேறு வழியின்றி அதிக விலையைக் கொடுத்து காய்கறிகளை வாங்கிச் சென்றனர். காய்கறிகளின் திடீர் விலை உயர்வால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

நேற்று ஒரே நாளில் வேலூர் மார்க்கெட் பகுதியில் மட்டும் ரூ.10 கோடிக்கு காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விற்பனையாகின. இதில், காய்கறி மட்டும் ரூ‌.2 கோடிக்கு விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து, காய்கறி வியாபாரிகள் கூறும்போது, "திங்கள்கிழமை முதல் ஒரு வாரத்துக்குத் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்த இருப்பதைத் தொடர்ந்து, கடந்த சனிக்கிழமை திடீரென கடைகளைத் திறக்க அரசு அனுமதி அளித்தது.

மாலை நேரத்தில் அறிவிப்பு வெளியானதால், வெளியூர்களில் இருந்து போதிய அளவுக்குக் காய்கறிகள் கொண்டுவர முடியவில்லை. வெள்ளிக்கிழமை இருப்பு வைத்திருந்த காய்கறிகள் மட்டுமே விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டன.

வேலூர் மாநகரப் பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 30 டன் காய்கறிகள் விற்பனையாகின. வழக்கமான நாட்களில் வேலூர் மாவட்டத்தில் 500 டன் முதல் 600 டன் காய்கறிகள் விற்பனையாகும். நேற்று வேலூருக்கு 300 டன் காய்கறி விற்பனைக்கு வந்தது. மொத்த வியாபாரத்தில் விலை உயர்த்தப்படவில்லை என்றாலும், சில்லறை வியாபாரத்தில் விலை அதிகரித்து விற்பனை செய்யப்பட்டது" என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE