தமிழகத்தில் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் தினக்கூலியாக பணிபுரியும் பல்நோக்கு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தூய்மைப் பணியாளர், மருத்துவமனைப் பணியாளர், செவிலிய உதவியாளர் போன்ற பணியிடங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு 2013-ம் ஆண்டு பல்நோக்கு மருத்துவப் பணியாளர் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டன.
இப்பணியிடங்களில் நியமிக்கப்படுவோருக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் நிர்ணயிக்கப்படும் தினக்கூலி அடிப்படையிலேயே ஊதியம் வழங்கப்படும்.
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு பணிநிரந்தரம் செய்யப்படுவர் என அரசு தெரிவித்தது. மேலும் இப்பணியிடங்கள் அந்தந்த மாவட்டங்களில் இனசுழற்சி அடிப்படையில் நிரப்பப்பட்டும் வருகின்றன.
» பொது ஊரடங்கையொட்டி மதுரையில் மக்கள் நடமாட்டத்தை ட்ரோன் மூலம் கண்காணிக்கும் போலீஸ்
» கரோனா தொற்றால் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் உயிரிழப்பு: ராணிப்பேட்டையில் சோகம்
சிவகங்கை மாவட்ட அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் பல்நோக்குப் பணியாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.544 வழங்கப்படுகிறது. இதேபோல் மாநிலம் முழுவதும் பல ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர்.
அரசு அறிவித்தபடி 5 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் பல்நோக்குப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து அரசு மருத்துவமனை பல்நோக்கு பணியாளர்கள் கூறுகையில், ‘ மருத்துவமனைகளில் அனைத்து பணிகளையும் நாங்களே கவனிக்கிறோம். தற்போது கரோனா பரிசோதனை மாதிரிகளை சேகரித்து கொண்டு செல்வது போன்ற பணிகளையும் கூடுதலாக கவனிக்கிறோம்.
எங்களை முறைப்படி இனசுழற்சி அடிப்படையில் தான் தேர்வு செய்தனர். இதனால் அரசு அறிவித்தப்படி 5 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிவோரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்,’ என்று கூறினர்.