தமிழகம் முழுவதும் நாளை ஊரடங்கு அமலுக்கு வரும் நிலையில், எம்எல்ஏ.க்கள் கூட்டம் நடத்த அதிமுக சார்பில் இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டார். கடந்த 10 ஆண்டுகளாக ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு வந்திருக்கிறது.
இதனால் அதிமுக சட்டமன்ற குழுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் முயற்சி நடந்து வருகிறது. முன்னதாக நேற்று முன் தினம் அதிமுக எம்.எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.
அதிமுக தலைமையகத்தில் சுமார் 4 மணி நேரம் கூட்டம் நடைபெற்றது. ஆனால், அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டமானது எந்தவித முடிவும் எட்டப்படாமல் முடிந்தது. ஒற்றைத் தலைமை கோஷத்தை முன்வைத்து ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே நடந்த வாக்குவாதத்தால் முடிவு எட்டப்படாமல் போனதாகத் தெரிகிறது.
இதனால், எம்எல்ஏக்களின் கூட்டம் வரும் 10 தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் நாளை மே 10 முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இதனால், எம்எல்ஏ.க்கள் கூட்டம் நடத்துவதற்கு அதிமுக தரப்பு காவல்துறையிடம் அனுமதி கோரி கடிதம் வழங்கியுள்ளனர்.
வரும் 12ம் தேதி சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நெருக்கடியில் அதிமுக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.