தமிழகத்தில் ரூ.426 கோடிக்கு டாஸ்மாக் மதுபானங்கள் விற்பனை: சென்னை மண்டலத்தில் அதிகம்

தமிழகம் முழுவதும் நேற்று (சனிக்கிழமை) ஒரே நாளில் மட்டும் 426.24 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அன்றாடம் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில், கரோனா சங்கிலியை உடைக்க நாளை முதல் 24ம் தேதி வரை இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது.

முழு ஊரடங்கு காலத்தில், தினமும் பகல் 12 மணிவரை காய்கறி, இறைச்சி, மளிகைக் கடைகள் மட்டுமே இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகள் செயல்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதனால் நேற்று சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையான இன்று டாஸ்மாக் கடைகள் இயங்குகின்றன.

சனிக்கிழமையான நேற்று, தமிழகம் முழுவதும், 426.24 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதில், சென்னை மண்டலத்தில் அதிகபட்சமாக ரூ.100.43 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன.

அடுத்தபடியாக திருச்சி மண்டலத்தில் 82.59 கோடி ரூபாய்க்கும், மூன்றாவதாக மதுரையில் 87.20 கோடி ரூபாய்க்கும் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமையான இன்றும் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளதால், நேற்றைவிட இன்று அதிகளவில் மது விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE