சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மாற்றம்: புதிய ஆணையராக ககன்தீப் சிங் பேடி நியமனம்

By செய்திப்பிரிவு

சென்னை மாநகராட்சி ஆணையராக ககன்தீப் சிங் பேடி நியமனம் செய்யப்பட்டார்.

தமிழகத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று மட்டும் 27,397 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிலும், குறிப்பாக, சென்னையில் கரோனா பரவல் இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வருகின்றது. சென்னையில் நேற்று 6,846 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். நேற்று (மே 08) வரை வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட 32,858 பேர் சென்னையில் கரோனா சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் கரோனா தாக்கம் அதிகரித்துள்ள சூழலில், சென்னை மாநகராட்சி ஆணையராக, வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளராக இருந்த ககன்தீப் சிங் பேடி இன்று (மே 09) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

2020-ம் ஆண்டு முதல் சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த பிரகாஷ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை இன்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்டுள்ளார்.

கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியராகப் பணிபுரிந்த ககன்தீப் சிங், மதுரை மாநகராட்சி ஆணையராகவும் இருந்துள்ளார். சுனாமி, தானே புயல், கஜா புயல், நிவர் புயல் உள்ளிட்ட பேரிடர் காலங்களில் தன் செயல்பாடுகளுக்காக அறியப்பட்டவர் ககன் தீப் சிங் பேடி.

தமிழக முதல்வராக மே 7 அன்று மு.க.ஸ்டாலின் பதவியேற்ற நிலையில், உடனடியாக தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த ராஜீவ் ரஞ்சன் மாற்றப்பட்டு வெ.இறையன்பு நியமிக்கப்பட்டார்.

சென்னை மாநகரக் காவல் ஆணையர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அதிகாரிகள் மாற்றப்பட்டனர். முதல்வருக்கு 4 தனிச் செயலாளர்களும் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையரும் மாற்றப்பட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE