புதுச்சேரியில் 1,746 பேருக்குப் புதிதாக கரோனா: மேலும் 19 பேர் உயிரிழப்பு

By அ.முன்னடியான்

புதுச்சேரியில் இன்று புதிதாக 1,746 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும், 9 பெண்கள் உட்பட ஒரே நாளில் 19 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத் துறைச் செயலர் அருண் இன்று(மே. 7) வெளியிட்ட தகவல்:

‘‘புதுச்சேரி மாநிலத்தில் 8,220 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 1,375 பேருக்கும், காரைக்காலில் 183 பேருக்கும், ஏனாமில் 138 பேருக்கும், மாஹேவில் 50 பேருக்கும் என மொத்தம் 1,746 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், புதுச்சேரியில் 17 பேர், ஏனாமில் 2 பேர் என மொத்தம் 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 920 ஆகவும், இறப்பு விகிதம் 1.35 ஆகவும் உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 68 ஆயிரத்து 373 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 2,054 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 11,024 பேரும் என மாநிலம் முழுவதும் மொத்தம் 13 ஆயிரத்து 78 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று அதிகபட்சமாக 1,079 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 54 ஆயிரத்து 375 (79.53 சதவீதம்) ஆக உள்ளது.

இதுவரை 8 லட்சத்து 39 ஆயிரத்து 73 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 7 லட்சத்து 62 ஆயிரத்து 176 பரிசோதனைகளுக்கு ‘நெகட்டிவ்’ என்று முடிவு வந்துள்ளது.

சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள்,பொதுமக்கள் என மொத்தம் 2 லட்சத்து 9 ஆயிரத்து 62 பேருக்கு (2-வது டோஸ் உட்பட) இதுவரை கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.’’

இவ்வாறு சுகாதாரத் துறைச் செயலர் அருண் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE