மாவட்டங்களில் தடுப்பூசி, ஆக்சிஜன், படுக்கைகள் இருப்பை உறுதி செய்யுங்கள்: உயர் அதிகாரிகள் ஆலோசனையில் ஸ்டாலின் அறிவுறுத்தல்  

தலைமைச் செயலர், சுகாதாரத்துறைச் செயலர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனையில் தமிழகத்தில் கரோனா பரவலைத் தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசிகள், ஆக்சிஜன், படுக்கைகள் இருப்பை உறுதி செய்யவேண்டும், அதற்காக மாவட்டங்களில் ஆட்சிப்பணி அதிகாரிகளை நியமித்து கண்காணிக்க வேண்டும் என்று ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

தமிழகத்தில் அதிகரித்து வரும் கரோனா பரவல் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலர், சுகாதாரத்துறைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

நேற்றிரவு இதையொட்டி ஊரடங்கில் மேலும் கூடுதல் கட்டுப்பாடுகள் அமலாவதாக அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் அதிக அளவில் தொற்றுப் பரவல் உள்ளதால் சில மாவட்டங்களில் ஊரடங்கை அமல்படுத்தலாம் எனச் சில நாட்களுக்கு முன் ஆலோசிக்கப்பட்டது. நேற்று ஸ்டாலினுடன் நடத்திய ஆலோசனையில் இதே கருத்தைத் தலைமைச் செயலரும், சுகாதாரத்துறைச் செயலரும் வைத்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால், ஊரடங்கால் மக்கள் வாழ்வாதாரம் மேலும் பாதிக்கப்படும் என்பதால் கட்டுப்பாடுகளை அதிகரிக்க ஸ்டாலின் உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கரோனா தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து இன்று மீண்டும் ஸ்டாலின் ஆய்வு நடத்தினார்.

இதுகுறித்து திமுக தலைமை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:

“நேற்று தமிழக அரசு வகுத்துள்ள கரோனா நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த வெளியிட்ட புதிய கட்டுப்பாடுகளை முறையாக நடைமுறைப்படுத்த திமுக தலைவர் ஸ்டாலின், தலைமைச் செயலாளர், காவல்துறை தலைவர், வருவாய்த்துறைச் செயலாளர், மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர், நிதித்துறைச் செயலாளர் மற்றும் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்தக் கட்டுப்பாடுகளைச் சரியாக நடைமுறைப்படுத்துவதன் அவசியம் குறித்தும், அதன்மூலம் மட்டுமே நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்பதனால் இதனை அனைத்துத் துறைகளும் சிறப்பாகக் கண்காணித்துச் செயல்படுத்தவும் கேட்டுக் கொண்டார்.

தற்போது மாநிலத்தில் நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்கவும், ஏற்கெனவே பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சை, படுக்கை வசதி மற்றும் ஆக்சிஜன் இருப்பு மற்றும் வழங்குதல் குறித்த விவரங்களைக் கேட்டறிந்து, அவை பொதுமக்களுக்கு எவ்வித தடையுமின்றிக் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கக் கேட்டுக் கொண்டார்.

அனைத்து மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்குத் தேவையான மருந்துகள் இருப்பு வைப்பதை உறுதி செய்யவும், இவை முறையாக அனைத்து மாவட்டங்களிலும் கிடைப்பதை உறுதி செய்யவும், வரும் சில நாட்களில் சிகிச்சை தேவைப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்தால், அவற்றை எதிர்கொள்ளத் தேவையான எண்ணிக்கையில் படுக்கை வசதி, ஆக்சிஜன் இருப்பு மற்றும் மருத்துவர்கள் இருப்பதைக் கண்காணித்து தரமான சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதிசெய்ய கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களை மாவட்டங்களுக்கு உடனடியாக அனுப்பி வைக்க அறிவுரை வழங்கினார்”.

இவ்வாறு திமுக தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE