சென்னை, செங்கல்பட்டு, கோவை மாவட்டங்களில் கரோனா பரவலைத் தடுப்பது சவாலாக உள்ளது: ராதாகிருஷ்ணன்

சென்னை, செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கரோனா தொற்றுப் பரவலைத் தடுப்பது சவாலாக உள்ளது என சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் இன்று (ஏப். 30) அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது:

"கோவிட் தொற்று ஒவ்வொரு நாளும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. நேற்று மட்டும் இந்தியா முழுவதும் 3 லட்சத்து 86 ஆயிரத்து 654 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,501 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் பல்வேறு செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தச் சொல்கிறோம். அரசு கட்டுப்பாடுகளை விதிக்கிறது என்ற எண்ணத்தில் மக்கள் இருக்க வேண்டாம். இதனை உங்கள் கடமையாக நினைத்தால்தான் தொற்று பாதிப்பை வேகமாகக் குறைக்க முடியும்.

சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருச்சி, சேலம் போன்ற மாவட்டங்கள் இன்னும் நமக்குச் சவாலாகத்தான் உள்ளன. சென்னை, ராணிப்பேட்டை, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் தொற்று பாதிப்பு உறுதி செய்யும் விகிதம் அதிகமாக இருக்கிறது. செங்கல்பட்டு, திருவண்ணாமலை, நாகப்பட்டினம், தூத்துக்குடி, சேலம், திருவள்ளூர் போன்ற மாவட்டங்களும் நமக்குச் சவாலாக உள்ளன. மாவட்ட ஆட்சியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் களப்பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்".

இவ்வாறு ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE