திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயிலில் பழமை மாறாமல் வர்ணம் பூசக்கோரி வழக்கு: அறநிலையத்துறை ஆணையர் நடவடிக்கை எடுக்க உத்தரவு

By கி.மகாராஜன்

திருவடடாறு ஆதிகேசவ பெருமாள் கோயிலில் பழமை மாறாமல் மூலிகை கலந்த வர்ணம் பூசக்கோரிய வழக்கில் அறநிலையத்துறை ஆணையர் நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த ஸ்ரீதரன், உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவில் கோபுரம், சுவர்கள் மற்றும் தூண்களில் தற்போது வர்ணம் பூசப்பட்டு வருகிறது. இந்த வர்ணம் தரமற்று இருப்பதாக பக்தர்கள் புகார் அளித்துள்ளனர். பொதுவாக பழமையான கோவில்களில் பச்சிலைகள் கலந்த வர்ணத்தை பூசுவது வழக்கம்.

அதற்கு மாறாக திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் வர்ணம் பூசப்படுவதால் கோவில் கோபுரம், தூண்கள், சுவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. கோவில் கருவறை தரையில் கிரானைட் கல் பதிக்கிறார்கள். கோவிலில் ஐந்து நேரமும் எண்ணெய் பூஜை நடைபெறும் நிலையில் கிரானைட் கற்கள் பக்தர்கள் நடந்து செல்ல இடையூறாக இருக்கும்.

எனவே, திருவட்டாறு ஆதிகேசவன் கோவிலில் பழமையான முறையில் வர்ணம் பூசவும், கருவறையில் பழமை மாறாமல் தரை கற்கள் பதிக்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மனுதாரர் புகார் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE