கரோனா பரவல் அதிகரித்து வருவதால் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதிகளிடம் முறையிடப்பட்டது.
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வில் திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் காணொலி வழியாக ஆஜராகி கூறியதாவது:
தமிழகத்தில் கரோனா 2-ம் அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. இதனால் கோவில்களில் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், டாஸ்மாக் கடைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை.
» நெல்லையில் புதிய உச்சம்: ஒரே நாளில் 826 பேருக்கு கரோனா; மகேந்திரகிரியில் ஆக்சிஜன் தயாரிப்பு
» புதுச்சேரி மதுக்கடைகள் மூடல்: கடலூர் கடைகளில் குவிந்த மதுப் பிரியர்கள்
டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அதிகளவு உள்ளதால் கரோனா பரவல் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட உத்தரவிட வேண்டும் என்றார்.
இது தொடர்பாக மனு தாக்கல் செய்தால், நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடக்கோரி ராம்குமார் ஆதித்தன் மனு தாக்கல் செய்தார்.