தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக சட்டம் மற்றும் நீதிமன்றங்கள், கனிமவளத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நேற்று விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திவிட்டு திண்டிவனத்தில் உள்ள தன் வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
இன்று காலை அவருக்கு கரோனா தொற்றுக்கான அறிகுறி தெரியவந்ததால் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் ஸ்வாப் பரிசோதனை செய்து கொண்டார். இந்நிலையில் மாலை அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.