புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் கால பறிமுதலில் ரூ.5.91 கோடி மதிப்பிலான பொருட்கள் திரும்ப ஒப்படைப்பு

By கே.சுரேஷ்

புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டதாக பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் இதுவரை ரூ.5.91 கோடி மதிப்பிலான பொருட்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் தேர்தல் நடத்தை விதிகளும் அமலாக்கப்பட்டன.

அன்று முதலே 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்புக் குழுவினர், வீடியோ கண்காணிப்புக் குழுவினரும் களத்தில் பணியாற்றினர்.

இவர்களின் சோதனையில், மொத்தம் ரூ. 9.23 கோடி மதிப்பிலான பொருட்கள், ரூ. 79 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு அந்தந்தத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலமாக கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டன.

படிப்படியாக உரிய ஆவணங்களை கொண்டு வந்துகாட்டுவோரிடம் பொருட்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 79.52 லட்சத்தில், ரூ. 6.49 லட்சம் ரொக்கப் பணத்துக்கு காவல்துறை மூலம் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில், ரூ. 54 லட்சம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ. 18.98 லட்சம் ஒப்படைக்கப்பட உள்ளது.

இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 9.23 கோடி மதிப்பிலான பொருட்களில், ரூ. 6.62 லட்சம் மதிப்பிலான பொருட்களுக்கு காவல் துறை மூலம் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில், ரூ. 5.91 கோடி மதிப்பிலான பொருட்கள் உரிய ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டு இதுவரை திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள ரூ. 3.24 கோடி மதிப்பிலான ஒப்படைக்க வேண்டிய பொருட்களில் ரூ. 3.17 கோடி மதிப்பிலான தங்க நகைகள், ரூ. 3 லட்சம் மதிப்பிலான வெள்ளிப் பொருட்கள், ரூ. 4.50 லட்சம் மதிப்பிலான எல்இடி டிவிகள், ரூ. 4,800 மதிப்பிலான எவர்சில்வர் பாத்திரங்களாகும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE