மதுரையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம்: வாகனங்களில் இருந்தாலும் அணிய அறிவுறுத்தல்

By ஒய். ஆண்டனி செல்வராஜ்

தமிழத்தில் கரோனா அதிகமாக பரவிக் கொண்டிருக்கிறது.

மதுரையில் கடந்த ஒரு வாரமாக முன்போல் கரோனா பாதிப்பு அதிகமாகிக் கொண்டிருக்கிறது. அதனால், மதுரை மாநகராட்சி, அனைவரையும் முகக்கவசம் அணிய வலியுறுத்தியது.

முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க மாநகராட்சி ஆணையாளர் விசாகன் உத்தரவிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில் மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் கரோனா தடுப்பு நடவடிக்கை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களின் வீடுகள் மற்றும் தெருக்களை தடுப்புகள் அடைத்து தனிமைப்படுத்தப்படும் நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது.

இது மட்டுமல்லாமல் முகக்கவசம் அணியாமல் சுற்றித்திரியும் நபர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

அரசுப் பேருந்து மற்றும் அனைத்து தனியார் வாகனங்களிலும் முகக்கவசம் அணியாமல் சென்றால் அவர்களுக்கும் ரூ.200 அபராதம் வசூலிக்கப்படுகிறது.

வரும் நாட்களில் தடுப்பு நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என மாநகராட்சி ஆணையாளர் விசாகன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE