காரைக்குடி அருகே தகரக் கொட்டகையில் செயல்பட்ட வாக்குச்சாவடி மையம்; வெயில் தாக்கத்தால் வாக்காளர்கள், அலுவலர்கள் சிரமம்

By இ.ஜெகநாதன்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே தகரக் கொட்டகையில் செயல்பட்ட வாக்குச்சாவடி மையத்தின் வெயில் தாக்கத்தால் வாக்காளர்கள், அலுவலர்கள் சிரமப்பட்டனர்.

காரைக்குடி அருகே நெம்மேனி அரசுப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் நெம்மேனி, சிறுக்கனாவயல், அழகுநாச்சியேந்தல், கொட்டகுடி, தச்சக்குடி, சோனார்கோட்டை, கண்டகருவயல், சின்னகொட்டகுடி உள்ளிட்ட கிராம மக்கள் வாக்களித்து வந்தனர்.

இந்நிலையில் கரோனா காரணமாக 1,000 வாக்காளர்களுக்கு மேல் இருந்த நெம்மேனி வாக்குச்சாவடி 2ஆகப் பிரிக்கப்பட்டது. வேறு கட்டிட வசதி இல்லாததால் தற்காலிகமாக தகரக் கொட்டகை அமைக்கப்பட்டது. இதில் அழகுநாச்சியேந்தல், கொட்டகுடி, தச்சக்குடி, சோனார்கோட்டை, கண்டகருவயல், சின்னகொட்டகுடி உள்ளிட்ட கிராம மக்கள் வாக்களித்தனர். வெயில் தாக்கத்தால் தகரக் கொட்டகையில் வெக்கை அதிகமாக இருந்தது. இதனால் வாக்காளர்கள், வாக்குப்பதிவு அலுவலர்கள் சிரமப்பட்டனர்.

மேலும் இந்த வாக்குச்சாவடிக்கு வருவதற்குப் பாதை இல்லாததால் கிராம மக்கள் ஒரு கி.மீ., வரை விளைநிலங்கள் வழியாக நடந்து வந்து வாக்களித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE