புதுக்கோட்டை மாவட்டத்தில் பணம் பதுக்கியதாக அதிமுக, திமுக வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் வீடுகளில் இன்று அதிரடி சோதனை செய்யப்பட்டது. மேலும், வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்ததாக அதிமுக நிர்வாகிகள் 2 பேரை போலீஸார் கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதியில் போட்டியிடும் எஸ்.ரகுபதி (திமுக), பி.கே.வைரமுத்து (அதிமுக) ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில், எஸ்.ரகுபதியின் ஆதரவாளர் வி.கோட்டையூரைச் சேர்ந்தவர் மங்களராமன். இவரது மனைவி ராமதிலகம். இவர் வி.கோட்டையூர் ஊராட்சித் தலைவராக உள்ளார்.
வாக்காளர்களுக்கு பணம் விநியோகிப்பதற்காக வீட்டில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக வந்த புகாரைத் தொடர்ந்து, 5 பேர் கொண்ட வருமான வரித்துறையினர் இன்று (ஏப். 03) மங்களராமன் வீட்டில் சோதனை செய்தனர். சுமார் 2 மணிநேரம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சில ஆவணங்களை பறிமுதல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.
» ஓட்டுக்குப் பணம் வாங்கினால் அடுத்த தலைமுறை பாதிக்கப்படும்: கமலுக்கு ஆதரவாக சரத்குமார் பிரச்சாரம்
» ஐடி ரெய்டு; தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சிகளைக் களங்கப்படுத்துகிற முயற்சி: கே.எஸ்.அழகிரி விமர்சனம்
இதேபோன்று, ஆலங்குடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தர்ம.தங்கவேலுக்கு ஆதரவாக வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக அரையப்பட்டியைச் சேர்ந்த அதிமுக ஊராட்சி செயலாளர் துரை உட்பட சிலரது வீடுகளில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, பறக்கும்படையினர், நிலையான கண்காணிப்புக் குழுவினர் துரை மற்றும் அவரது உறவினர் என மொத்தம் 7 பேர்களின் வீடுகளில் இன்று (ஏப்.3) தொடர் சோதனையில் ஈடுபட்டனர்.
ஆலங்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் முத்துராஜா தலைமையில் அரையப்பட்டியில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். எனினும், நீண்ட நேரம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் பெருந்தொகை எதுவும் சிக்கவில்லை என தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.
அதிமுக நிர்வாகிகள் கைது:
புதுக்கோட்டை மச்சுவாடி பகுதியில் அதிமுக வேட்பாளர் வி.ஆர்.கார்த்திக் தொண்டைமானுக்கு ஆதரவாக வீடு வீடாகச் சென்று வாக்காளர்களுக்கு அதிமுகவினர் பணம் விநியோகம் செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது.
புகாரின் அடிப்படையில் அதிமுகவின் வட்ட அவைத் தலைவர் பழனி, பாலன் நகர் வட்டச் செயலாளர் சதாசிவம் ஆகியோரை கணேஷ் நகர் காவல் நிலையத்தினர் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து ரூ.50 ஆயிரத்து 500 மற்றும் வாக்காளர் பட்டியலையும் பறிமுதல் செய்தனர்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பணம் விநியோகம் செய்வதாக தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார்கள் வந்தவண்ணமாக இருப்பதால் பல்வேறு இடங்களில் சோதனைகளை தீவிரப்படுத்துமாறு மாவட்ட தேர்தல் அலுவலர் பி.உமா மகேஸ்வரி அறிவுறுத்தியதோடு, விராலிமலை தொகுதியில் பறக்கும் படையினரின் வாகன சோதனையை ஆய்வு செய்தார்.