எனக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் காவல் துறை, தேர்தல் ஆணையம்தான் பொறுப்பு: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு

எனக்கோ, எனது கட்சிக்காரர் களுக்கோ ஏதாவது அசம்பா விதம் ஏற்பட்டால் அதற்கு காவல் துறையும், தேர்தல் ஆணையமும்தான் பொறுப்பு என மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

கரூரில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

கரூரில் நேற்று(நேற்று முன்தினம்) இரவு நாங்கள் பிரச்சாரம் செய்யும் இடங்களுக்கு சந்தேகத்துக்கு இடமான முறையில் சுற்றிய சிலரைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தோம். அவர்கள் தொடர்ந்து 4 நாட்களாக எங்களை பின் தொடர்ந்து வந்தனர். இவர்கள் திமுக தொடர்பில் உள்ளவர்கள். திமுக தூண்டுதலின்பேரில் கரூர் தொகுதியில் சதி வேலை செய்ய திட்டமிட்டுள்ளனர். கரூரில் ஹோட்டலில் இவர்கள் போலி முகவரி கொடுத்து தங்கியுள்ளனர். இதுகுறித்து புகார் அளித்தும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை. எனக்கோ, எனது கட்சிக்காரர்களுக்கோ ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு காவல் துறையும், தேர்தல் ஆணையமும்தான் பொறுப்பு.

ஆரத்தி எடுக்கும்போது வைக்கப்பட்ட பொட்டால் நெற்றி புண்ணாகிவிட்டது. இதனால் பிரச்சாரத்தின்போது ஒரு பெண் பொட்டு வைக்க வந்த போது வலி தாங்க முடியாமல் தடுத்தேன். இதை தவறாக சித்தரித்து பட்டியலின பெண் பொட்டு வைக்கும்போது அமைச்சர் தட்டிவிட்டதாக பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

கரூர் அமராவதி ஆற்றில் 4 இடங்களில் மணல் எடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. அதற்கான பணி நடை முறையில் இருந்து வருகிறது. நீதிமன்ற உத்தரவுப்படி தேர்தலுக்கு பிறகு காவிரி ஆற்றில் மணல் எடுக்கலாம் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE