சட்டப்பேரவை தேர்தலில் அதிக பெரும்பான்மையுடன் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்: பொதுச்செயலாளர் துரைமுருகன் நம்பிக்கை

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைக்கும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் சட்டப்பேரவை தொகுதியின் திமுக வேட்பாளரும், தற்போதைய எம்எல்ஏவுமான வி.ஜி.ராஜேந்திரனுக்கு ஆதரவாக கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மணவாளநகர் மற்றும் பேரம்பாக்கம் பகுதிகளில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் நேற்று முன் தினம் இரவு வாக்குச் சேகரித்தார்.

அப்போது, அவர் பொதுமக்களிடையே பேசியதாவது:

பழனிசாமி ஆட்சி மக்கள் மத்தியில் ஒளி குறைந்துள்ள ஆட்சி. அவர் தன் ஆட்சியில் எதையும் சாதிக்கவில்லை. பழனிசாமி தமிழகத்தை கடன்கார மாநிலமாக மாற்றியுள்ளார். தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும், தற்போதைய முதல்வர் பழனிசாமியும் ஆட்சி செய்த 10 ஆண்டுகள் இருண்ட காலங்களாகும். இந்நிலையில் இருண்ட காலத்துக்குப் பின் ஒளி பிரகாசிப்பது போல் மு.க.ஸ்டாலின் வந்துள்ளார். அவர், என்னை மலைக்க வைக்கும் அளவுக்கு உழைக்கிறார்.

அதனால், தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE