முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சர்கள் பிரச்சாரம் செய்யத் தடை கோரி வழக்கு: உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை

அரசுப் பதவி வகிக்கும் முதல்வர், அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர், தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரம் செய்யத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. விரைவில் மனு விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.

தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த வகுக்கப்பட்ட தேர்தல் நடத்தை விதிகளில், அமைச்சர்கள் தங்கள் அலுவல் சார்ந்த பணியுடன், தேர்தல் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்றும், அரசு வாகனங்களை தேர்தலுக்குப் பயன்படுத்தக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

அரசுப் பதவி வகிக்கும் முதல்வர், அமைச்சர்கள், தங்கள் கட்சி வேட்பாளர்களுக்குப் பிரச்சாரம் செய்வது வாக்காளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், முதல்வர், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரம் செய்யத் தடை விதிக்கக் கோரி, அஹிம்சா சோசியலிஸ்ட் கட்சி நிறுவனத் தலைவர் ரமேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், தேர்தல் பிரச்சாரத்தின் போது, அமைச்சர்கள் தங்கள் அரசு அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறார்களா எனக் கண்காணிக்க எந்த நடைமுறையும் இல்லை என்பதால், அரசு சம்பளம் பெறும் அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரம் செய்ய அனுமதிக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிய மனுவைப் பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வரவுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE