தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி வேட்புமனுத் தாக்கல் முடிந்து வேட்புமனு பரிசீலனை இன்று நடக்கிறது. இதில் அரவக்குறிச்சியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடும் அண்ணாமலையின் வேட்புமனு பரிசீலனை எதிர்க்கட்சிகள் ஆட்சேபத்தால் நிறுத்தி வைக்கப்பட்டது. விளக்கம் அளிக்கப்பட்ட பிறகு, மனு ஏற்கப்பட்டது.
தமிழக பாஜகவில் கடந்த ஆண்டு இணைந்தவர் அண்ணாமலை. ஐபிஎஸ் அதிகாரியாக கர்நாடகத்தில் துணை ஆணையராகப் பணியாற்றினார். பின்னர் பொதுச்சேவை செய்வதற்காகத் தனது ஐபிஎஸ் பதவியை உதறிவிட்டு தமிழகம் வந்து ஒரு அமைப்பைத் தொடங்கி சேவை செய்து வந்தார்.
ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தால் அதில் இவர்தான் முதல்வர் வேட்பாளர் என்றெல்லாம் பேசப்பட்டது.
ஆனால், திடீரென அண்ணாமலை பாஜகவில் இணைந்தார். அவருக்கு மாநிலத் துணைத் தலைவர் பதவி அளிக்கப்பட்டது. சட்டப்பேரவைத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் அண்ணாமலை போட்டியிடுகிறார். தான் போட்டியிடும் அரவக்குறிச்சியில் சமீபத்தில் அண்ணாமலை வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
இந்நிலையில் இன்று வேட்புமனு பரிசீலனை நடந்தது. அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலை தன் மீதுள்ள குற்ற விவரங்களைத் தாக்கல் செய்யவில்லை என எதிர்க்கட்சியினர் ஆட்சேபம் தெரிவித்தனர். இதனால் அவரது மனுவைத் தேர்தல் அதிகாரிகள் நிறுத்திவைத்தனர்.
» பொதுக் கூட்டத்தில் புகுந்த பசுமாடு: அடிக்காதீங்கப்பா; போய்விடும்; பாதுகாத்து அனுப்பிய முதல்வர்
அண்ணாமலை மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. அதுகுறித்த விவரங்களை அவர் மனுவில் குறிப்பிடவில்லை என எதிர்க்கட்சியினர், சுயேச்சை வேட்பாளர் உள்ளிட்டோர் தேர்தல் அதிகாரியிடம் கூறி நிராகரிக்கக் கோரியதாகத் தகவல் வெளியானது.
அண்ணாமலை தற்போது பிரச்சாரத்தில் உள்ளார் என்பதால், அவரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு உரிய விளக்கம் அளிக்கப்பட்டது. இதன் பின்னர் அவரது வேட்புமனு ஏற்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.